பாற்கடல்...

இனியவை பிறக்கட்டும்...

குழந்தை என்னுமோர் "குறும்பு'யல்

நம்மை விட புத்திசாலிகளிடம் பேசும்போது 'எச்சரிக்கை'யாகவும், முட்டாள்களிடம் பேசும்போது 'அதிக எச்சரிக்கை'யாகவும் பேசுவது நல்லது, நண்பர் திரு தனது பதிவில் இந்த வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார். படிக்கும் போது ஏனோதானோ என்று படித்து விட்டேன். அவரிடம் கேட்க வேண்டும் குழந்தைகளிடம் பேசும் போது எப்படிப் பேச வேண்டும் என்பது. தயவு செய்து முட்டாள் போல பேசிவிடுங்கள் அதுதான் நல்லது என நினைக்கிறேன்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் எனக்கு அப்படியொரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தாள் சுவி, சுவேதா; பக்கத்து வீட்டு குட்டி தேவதை ( பக்கத்து வீட்டுக்கு மட்டும். பின்னே என்னை மூக்கறுத்தால், குட்டிச்சாத்தான் என்றுதானே சொல்லத்தோணும்).
விஷயம் இதுதான். நான்கைந்து சோட்டாளிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள் சுவி. பள்ளியில் ஆசிரியர்கள் இவளுக்கு நடத்திய பாடத்தை, வீட்டு வாசல் படிகளுக்கும், நாற்காலிகளுக்கும் நடத்திக் கொண்டிருந்தாள். சலிப்புத் தட்டி விட்டதால், "மாமா நீதா நெறைய படிச்சியாமா எங்கம்மா சொல்லிச்சு (அப்படியா சொல்லி வச்சுருக்காங்க.. ம்ஹூம் இது ஆவறதில்ல). எதாவது கதை சொல்லு. தங்க(ம்) கதை இருந்தா சொல்லு". (பொண்ணுக காரியத்துல கண்ணா இருக்காங்க).
நான் கதை சொல்ல பிரயத்னப்படாமல், சமாளிக்க முயன்றேன். ஒருவாறு ஆசுவாசப்படுத்திக் கொண்டு, சங்கத் தமிழரின் பெருமையை பீற்றலாம் என நினைத்து, "அந்தக் காலத்துல நம்ம கிட்ட நெறைய நெறைய
தங்கம் இருந்துச்சாம். நம்ம ஆத்தா இருக்குல்ல அவங்கள மாதிரி இருக்கறவங்க, காதுல பெரிசா தொங்கட்டான் மாதிரி குண்டு குண்டா தங்கம் போட்டிருப்பாங்களாம். கோழி, காக்காய் எல்லாம் நெல்லு தானியத்த கொத்த வந்துச்சுனா, காதுல இருக்கற தங்கத்த கழட்டி வீசிதான் விரட்டுவாங்களாம்".
நிசமாவா... நம்பாமல் பார்த்தாள். (அந்த முகச்சுளிப்புக்கே ஆயிரம் பொன் தரலாம்). அவ்ளோ நெறையாவா... பொய் சொல்லலைல்ல. ஒரு வழியாக நம்பி, கண்கள் விரிய கேட்டுக் கொண்டிருந்தாள்( மறுபடியும் ஆயிரம் பொன்).
திடீரென வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த அக்கா, "நகத்தக் கடிக்காம இருக்க மாட்டியா. பொழுதோட நகம்வெட்டறது, கூட்டறதுன்னு ஆகாத வேலையத்தான் செய்வ. சொன்ன கேட்கறதே இல்ல" போகிற போக்கில் சுவியை வசைபாடி விட்டு போக.
காதருகே, எப்பப்பார்த்தாலும் இப்டிதான். ஏ மாம்சு, நைட்ல நகம் வெட்டக்கூடாதா, டைம் கிடக்றப்பதா வெட்ட முடியும். உங்கக்கா கிட்ட சொல்லு' என்றாள் சுவி.
அதுக்கப்பறம்தான் சனி ஏழாம் இடத்தில் நீச்சம் பெற்றான்.
"அம்மாக்கு ஒன்னும் தெரியாது. அந்தக் காலத்துல இப்ப மாதிரி பளிச்சுனு எரிய வெளக்கு இல்ல. மின்சாரம் இல்ல. அதனால, கொஞ்சம் வீடு இருட்டா இருக்கும். நகத்தை சரியா வெட்ட முடியாது. சிந்திக்கிடக்கறத முழுசா கூட்ட முடியாது. கூட்டி அள்றதுல சின்னச் சின்ன பொருட்கள் குப்பையோட வெளில கொட்டிருவோம் இல்ல. அதனாலதான் அப்படி சொல்லியிருப்பாங்க".
என் மேதாவித் தனத்தைக் காட்டவும், எனக்குத் தெரிஞ்ச பகுத்தறிவை அவளுக்கும் ஊட்டலாம் என்றுதான் அப்படிச் சொன்னேன். நான் சொன்னதற்கு அவளிடம் உடனடி மறுமொழி வந்தது. ஆனால், வேறுவிதமாக.
சினிமாவில் காட்டுவார்களே "ஆப் ரவுண்டு டிராலி ஷாட்' அதே மாதிரி இடுப்பில் கை வைத்துக் கொண்டு என்னை அரைவட்டம் போட்டாள். ஒவ்வொரு வார்த்தைக்கும் 30 நொடிகள் இடை வெளி விட்டு பேசினாள். அதே மாதிரி நீங்களும் படித்துப் பாருங்கள்." நைட்டு..... கூட்டினா.... சின்னப் பொருள்... குப்பையில போயிரும்....."
முகத்துக்கு நேரே கை நீட்டியபடி, "மூஞ்சிய பாரு. அதா தங்கத்தையே வீசி கோழி முடுக்கறாங்களாம். கூட்டுனா சின்ன பொருள் வெளியே போயிரும்னு, விட்டுட்டாங்களாம். தங்கத்த விட, சின்னப் பொருள பெரிசா நினைப்பாங்களாக்கு. தெரிஞ்சா ஒழுக்கமா சொல்லணும். இல்லேன்னா..... டேஷ் மாதிரி ஒளறக்கூடாது.(அவளின் வகுப்புத் தோழி ஒருத்தியின் பெயர்தான் அந்த டேஷ்சில் வர வேண்டிய பெயர். கெட்ட வார்த்தை எல்லாம் இல்லை. பெயர் நினைவில் இல்லாததால் டேஷ் போட்டிருக்கேன்)
"டே அழகு வாடா விளையாடப்போலாம். இதுக்கு எங்க அம்மாவே பரவால்ல," சற்றும் மதிக்காமல் அவள்பாட்டுக்கு போய்விட்டாள். நான் கீழே கிடந்த என் மூக்கை அக்காவுக்கு தெரியாமல் எடுத்து மாட்டிக் கொண்டு, அவசரமாக வெளியே போய் விட்டேன்.
அந்தக் கணத்தில் முடிவு செய்தேன். இனி குழந்தைகளிடம் முட்டாள் மாதிரி பேசிவிடுவது எல்லாருக்கும் நல்லது என்று.

3 comments:

//....சற்றும் மதிக்காமல் அவள்பாட்டுக்கு போய்விட்டாள்.//
டேன்ஜரஸ் ஃபெளோஸ். இவங்கள கேர்ஃபுல்லாத்தான் ஹேண்டில் பண்ணனும்.


http://vaarththai.wordpress.com

 

சூப்பர்!பூங்கொத்து!

 

அருமை... வாழ்த்துக்கள்

 

Post a Comment