பாற்கடல்...

இனியவை பிறக்கட்டும்...

மரித்துப் போன சொற்களைப் பதப்படுத்தியவன்



சகி,

ரணத்தில் இருந்து குருதி ஒழுக, நகர்தலுக்கான சாத்தியக்கூறுகள் முடங்கிப் போய்விட்ட, நினைவுகள் தப்பிப் போகும் முன்னரே உறுப்புகள் புசிக்கப்படுவதை உணரும், வேட்டையாடப்பட்ட மிருகத்தின் அவஸ்தை எனக்குள். முனகக்கூட திராணியற்றுப் போய்விட்ட அம்மிருகத்தைப் போலவே என் வார்த்தைகளும் பிய்த்தெறியப்பட்டிருக்கின்றன அல்லது உருத்தெரியாமல் சிதைக்கப்பட்டிருக்கின்றன.

உனக்கு நினைவிருக்கக்கூடும் பதின்ம வயதில் சக, எதிர்பால் ஈர்ப்புக்காக மற்றவர்கள் மெனக்கெட, எனக்கான ஆயுதமாக சொற்களைக் கூர்தீட்டிக் கொண்டிருந்தேன். நுட்பமும், சிலேடையும், ரஸமும் மிக்க சொற்களால் என்னை நிரப்பிக் கொண்டிருந்தேன் அவற்றில் சிலவற்றை பிரயோகிப்பதே எனக்குப் போதுமானதாக இருந்தது. செறிவு மிக்க சொற்களாலேயே என்னைத் தகவமைத்துக் கொண்டதாக, அப்போது எனக்குப் பட்டது. சதா சொற்களிலேயே களமாடிப் பழகி விட்ட பின், சொப்பனங்கள் கூட சொற்களால் நெய்யப்பட்டிருந்தன. அகங்கைக் குழியில் தேக்கப்பட்ட எண்ணெய், அதீத கவனத்தையும் மீறி விரலிடுக்குகள் வழியே கசிவதைப் போல, எனக்குள் சொற்கள் கசிந்து கொண்டிருந்தன. ஆனால், எனக்குத் தெரியும், என்னை உன்னில் அனுமதிக்க அவை ஒரு காரணமாக இல்லை என்பது. உனக்குச் சொற்கள் பற்றி எவ்வித அக்கறையும் இருந்ததாக என் நினைவில் இல்லை. சூலுற்ற சோளப் பயிர் வாசத்தைப் போல, விவரணத்துக்கு அப்பாலான வாசனையை உன் சொற்கள் கொண்டிருந்தன. அருகிருந்த பொழுதுகளில், உன்னை விட உன் சொற்களை நான் கவனித்ததை, நீ கவனிக்காதது போல் அவதானிப்பாய்.

சொல்லரங்குகளின் முடிவில் என் பெயர் பிரதானப்படுத்தப்படும் போதெல்லாம், உன் இதழ்கள் இடது புறமாய் சற்றே நகர்ந்த பின் இயல்பாகும். பொருள் காண முடியா அப்புன்னகையைச் சந்திக்க நேர்கையில், அந்த குறுகுறுப்பு... ம்ச்சு. நிராயுதபாணி எதிரியை வெல்லவும் முடியாமல், பின் வாங்கவும் தோன்றாமல், கொன்றுவிடமாட்டானா என ஏங்கும் மன நிலையில் இருப்பானே, அப்படித் தோன்றுமெனக்கு. இளவேனிற் காலத்து மதிய நேரமொன்றில் உன் தோட்டலிருந்தோம். தாத்தாப்பூ தலைகளைக் கொய்தபடி, வரப்பில் முழந்தாளின் மீது தாவாய்க்கட்டையை ஊன்றியபடி நீ மவுனித்திருந்தாய். திடீரென என் தலைபற்றி விரல்களால் அளைந்தபடி, உதடு பிரித்தாய்; சொற்கள் பிரவகித்தன. நீ பேசியதின் துவக்கம் நினைவில் இல்லை எனக்கு. ஆனால், மணலோடிய கால்வாயில் பாம்பின் தடம் கூட, அடிவயிற்றை இழுக்குமே அந்த உணர்வு இருந்தது. யாரிடமும் அதிர்ந்தோ, வியாக்கியானமாகவோ பேசியறியாத/அறியப்படாத நீ அன்று பேசியவை, முதிர்ச்சி மிக்க உழவன் ‘விலா பிரிக்கும் லாவகத்துடன் இருந்தன.

பின்னான நாட்களில் அப்படி ஒரு பிரிவு வருமென எதிர்பார்க்கவில்லை இருவரும். ஒருவேளை நீ எதிர்பார்த்திருக்கக்கூடும். அந்த வாக்குவாத நேரங்களில் என்னை மிகவும் தற்காத்துக் கொண்ட போது, உன் சொற்களை என்னால் எதிர்கொள்ளவே இயலவில்லை என்பது உனக்குத் தெரியுமா? இன்றும் கூட என் ஒவ்வொரு அணுவிலும் அந்தச் சொற்கள் சதா ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. கனவில் அம்மாவை நரி இழுத்துச் செல்கையில் அழும் குழந்தை போல, பின்னரவில் என் முகம் கோணுவதை மற்றவர்களிடம் இருந்து மறைக்க, என் சொற்சேகரங்கள் உதவுவதில்லை.

சின்னாட்களுக்கு முன், அதை நான் கேள்விப்பட்டேன். ‘கலகலன்னு பேசிட்டே இருப்பா! இப்பல்லாம் யார்கிட்டயும் பேசறதே இல்ல அதுவும் கல்யாணத்துக்கப்புறம் பேசாமடந்தை ஆயிட்டா என்று.

என் சேகரச் சொற்களில் பெரும்பாலானவை மரித்து விட்டன; பதப்படுத்தி வைத்திருக்கிறேன். அவற்றை விற்றுப் பிழைப்பவனாக இருக்கிறேன். உன் இறுதிச் சொற்களை உயிர்ப்புடன் சுமந்தவாறு.