பாற்கடல்...

இனியவை பிறக்கட்டும்...

களி கூறல்


திங்களின் முகமும் கொண்டு
திருமகளாய் வந்த தேவி,
பெற்றங்கள் நிறைந்த இல்லம்
பீடுடன் வாழ்வது போலும்
சுற்றங்கள் மகிழ எம்இல்
நல்லறம் புகுந்த மாது,
நனிபசும்பாலைப் போல
நற்சுவை தன்னைச் சேர்த்து
நல்லரும் வாழ்வே போந்தாள்.
பாணரும், பாடினியரும்
தமிழ்மிகு புலவோர் தாமும்
சாற்றிய தேன்கவிகள் கேட்டு,
அரும்பொருள், ஆடை, தங்கம்
நெல்வயல், நிரைகள் பிறவும்
தந்து புகழ் சேர்த்த மன்னர்
வீற்றிருந்தது கேட்டதுண்டு.
பாடல்பாடும் முன்னே
பரிசிலைத் தந்த பாவை தன்னை
அறிந்தவர் உளரோ யாரும்
எம்குலம் இனிது செழிக்க
வளமார் பொன்னி அன்ன
இன்னரும் புதல்வி தந்த தேவி,
நிலமகள் தன்னையாள
ஏறென ஆண்மகவு தன்னை
இனிதாய் எமக்குத் தந்தாள்
வேளிர் வேந்தன் தன்னை
வேழமென எமக்குத் தந்த
அன்னை அவர்க்கு,
என் சொல்லி நன்றி கூற
ககனமே வென்று வந்து,
கால்களில் வைத்த போதும்
இணையில்லை என்பதாலே
மாசற்ற தாள்கள் அதன்மேல்
கண்ணீரால் சிரித்து வைத்தேன்


*குட்டி இளவரசனைத் தந்த
எம் ப்ரிய அண்ணிக்கு...

சாக்தம்


அணிகளைந்து
ஆடையவிழ்த்து
பூ அகற்றிய பின்
ஊற்றிய நீர்
பிறைநெற்றிச் சாந்தழித்து
நேரிள கொங்கை நனைத்து
இடை வழிந்து
நாபி நிறைத்து
மேழி நிகர்த்த கால்கள் தழுவி
விரல்வழிச் சொட்டியது.

ஆடவன் விரல்கள்
அங்கம் தடவின;
அலங்கரித்தன

திரை விலகியதும்
தூர நின்று
தரிசித்த பெண்டிர்க்கு
ஆயிரம் கசைகள்
அணைந்து பிரிந்த
அவஸ்தையில்
தொடையிடுக்கியபடி
அருள்பாலிக்கத் துவங்கினாள்
முயங்குபூண் முலையம்மன்



சாக்தம்--சக்தி வழிபாடு