பாற்கடல்...

இனியவை பிறக்கட்டும்...

யானைகள் துரத்தும் கனவு


முந்தைய நாள் இரவை
விழுங்கியிருந்த மழை,
இட்டேரி முழுக்க
மணற்கம்பளம் விரித்திருக்க,
என் உள்ளங்கையை
நிறைத்திருந்தது அப்பாவின்
சுண்டுவிரல்.
விரலிடையில் குறுகுறுக்க
மணல்வெளியெங்கும்
என் கால்தடத்தை
வாஞ்சையாய்ப் பதித்திருந்தார்.
முதல் பள்ளிப் பிரவேசம்
கண்ணீர் ததும்ப நான்,
புன்னகையுடன் அவர்
நின்றது இன்னும் இருக்கிறது
நினைவில்.
எதிர்பாராத போது
கிணற்றுக்குள் தூக்கி வீசி,
தண்ணீர் குடித்து நான்
காற்றுக்குத் தவிக்க,
தலைமுடி பற்றி தூக்கிச்சிரித்து,
"புர்ரி' என்ற போது,
கழுத்தைக் கட்டிக் கொண்ட
நிமிடங்கள்.
கண்கள் விரிய அவர்
கதை சொல்லும் போது,
கனவுகளில் யானை துரத்தும்.
பொன்னியின் செல்வனை
அறிமுகம் செய்ததில்,
வந்தியத்தேவன் குதிரை
என் ஆதர்சம்.
இளவேனிற் பௌர்ணமி,
நட்சத்திர வானம்
என, ஒவ்வொன்றாய்
ஊட்டிவிட்டவர்,
ஒரு முறை அரிவாள் ஏந்தி
அய்யனாராய் நின்றார்.
"அவங்கூட வந்த பின்னாடி
எங்க வீட்டுப் பொண்ணு;
பாத்துட்டுப் போலாம், கூட்டிட்டுப்
போக நினைக்கக்கூடாது'
என்றபோது,
உறவுகள் உறைந்து நின்றன.
எனக்கு அவர் மகா சொரூபி;
அவரின் சுண்டுவிரலை,
தன் உள்ளங்கையில்
நிறைத்துக் கொண்டிருக்கும்
என் மகனைக்கேட்டேன்,
உனக்கு என்ன பிடிக்கும்?
"யானைகள் துரத்தும் கனவுகள்
பிடிக்கும்' என்றான் அவன்.