பாற்கடல்...

இனியவை பிறக்கட்டும்...

ரிதுக்குட்டியும் அனு என்றொரு தோழனும்

பெங்களூரு சி.வி., ராமன் நகரில் கோவில் கொண்டுள்ள அனுமந்தராயர், அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கும், இன்னபிறருக்கும் கடவுள். கடவுள் வழிபாட்டில் நம்பிக்கை உடையவர்களில் 90 சதவீதத்தினரின் இஷ்ட தெய்வமாக ஹனுமன் இருப்பார். ஏனெனில் இந்துக்கடவுள்களில் பிரதானமான ராமனின் அடியவர்; சர்வ வல்லமை படைத்த கடவுள்; பெரும்பாலான ஜிம்களில் வலிமைக்கு உதாரணம். தமிழார்வம் மிக்கவர்களுக்கு சொல்லின் செல்வன். சில அரசியல் கட்சியினருக்கு பிரதான லோகோ. சுருக்கமாக சொல்லப்போனால், நோபல் பரிசுக்கு தகுதியுடையவரா இல்லையா என்ற சர்ச்சையில் சிக்கி இருக்கும், அமெரிக்க அதிபரின் இஷ்ட தெய்வமும் கூட.
இவ்வளவு பிரசித்தியும், சர்வ வல்லமையும் பெற்ற ஒருவர் உங்களுக்கு என்னவாக இருக்க முடியும். கடவுள் என்ற உறவைத் தவிர. ஆனால், இதைப்பற்றியெல்லாம் ரிதுவுக்கு தெரியாது; அதைப்பற்றிய கவலையும் இல்லை அவளுக்கு.
ஓ….. இதுவரை ரிதுவை அறிமுகப்படுத்தாமைக்காக மன்னிக்கவும். அவள் இந்த பூமிக்கு புதுவரவு; ஜஸ்ட் 12 லட்சத்து 74 ஆயிரத்து 41 நிமிடங்களே ஆகின்றன. கணக்கிட சிரமமாக இருக்கிறதா; ரிது(ரிதன்யா) 29 மாதங்களான அழகிய குட்டி தேவதை.
ரிதுவை பொருத்தவரை ஹனுமான், ஹனு ஆகி, அனு ஆகி விட்டிருக்கிறார். தன் வயதொத்த சிறு தோழனாகவே பாவிக்கிறாள். தன் வயதொத்த, என்று நாமாகத்தான் எண்ணிக் கொள்ள வேண்டும். ஏனெனில், அவள் எங்கு சென்றாலும், அனு அவளின் தோளில் அமர்ந்திருப்பான், அல்லது பின்னால் வந்து கொண்டிருப்பான். ( ஆஷ்டான அனுபூதிகள் மன்னிப்பார்களாக). அவ்வளவு சிறிய உருவத்துக்கு இரண்டு ஆண்டுகள் வயது இருக்குமா என்ன?
என்னதான் பிரெண்டாக இருந்தாலும், கிண்டர்ஜாய்(குழந்தைகளுக்கு பிடித்தமான தின்பண்டம்) வாங்கினால், அனுவுக்கு கிடையாது. தான் “புஸ்“(இயற்கை உபாதைக்கு, ரிது வைத்திருக்கும் பெயர்) போனதையும் அனுவிடம் யாரும் சொல்லக்கூடாது.
அம்மா வலிக்குது, அனுக்கிட்ட ச்சொல்லுங்க( எதுவாயினும், அனுவிடம் சொன்னால் சரியாக போய்விடும் என்பது, ரிதுவின் நம்பிக்கை). உறங்கும் போது, அனுவும் உடன் பள்ளிகொள்வான். இன்னும் ரிதுவுக்கு வரைய தெரியாது என்பதால், அனுவை எந்தமாதிரி கற்பனை செய்து வைத்திருக்கிறாள் என தெரியவில்லை. ஒரு வேளை குஷிவாலி கபீஷ் மாதிரி இருக்க கூடும்.(கபீஷ் குறும்பும், புத்திசாலித்தனமும் நிறைந்த ஒரு குரங்கு- காமிக்ஸ் ஹீரோ)
யார் மீதும் கோபம் வந்தால், ரிது உடனே அனுவிடம் சொல்லிவிடுவாள். சில சமயங்களில் அனுவுக்கும் சேர்த்து திட்டு கிடைக்கும்.
குழந்தைகளுக்கான உலகம் தனி. எல்லாவற்றையும் குழந்தைத்தனமாகவே அணுகுகிறது. அது கடவுளாகவே இருக்கட்டுமே; அதனால் என்ன?
ரிதுவுக்கு மேலும் சில நண்பர்கள் உண்டு. அவர்களும் அனுவோடு தொடர்புடையவர்களே. அத்தனை பேருமே அவளின் பரந்து விரிந்த கற்பனை ராஜ்ஜியத்துக்கு உரியவர்கள்.
ச்சிம்ப்பு(சிம்பன்சி என்பதன் சுருக்கம் தான் அது தமிழ் நடிகர்கள் யாராவது நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல); சுக்ரீவன்தான் சிம்பன்சி ஆகி, ச்சிம்பு ஆகியிருக்கிறார். அடுத்த கற்பனை கேரக்டர் ராமாயணம். மற்ற இரு நண்பர்களையும் குரங்கு வடிவில் கற்பனை செய்து கொள்ள முடியும். ஆனால், ராமாயணத்துக்கு என்ன உருவம் கொடுக்க முடியும். ஆச்சரியப்படத்தக்க வகையில் ரிதுவால் முடிந்திருக்கிறது.
அண்ணனும், அண்ணியும் வேலைக்கு சென்று விட(வெல்கம் டூ தி கார்பொரேட் வேர்ல்டு) அம்மம்மாவுடன் இருக்கும் ரிது, இந்த மூவருடனும்தான் விளையாடுவாள். உங்களுக்கு தெரியுமா, அப்பாவின் கார் அவளுக்கு பிடித்தமான ஒன்று. ஆனால், பிரண்ட்ஸ்களுடன் பைக்கில் போவதுதான் அவளுக்கு பிடிக்கும், ஒரு முறை ரிது, அனு, ச்சிம்பு, ராமாயணம் நான்கு பேரும் பைக்கில் போன போது, போலீஸ் பிடித்து விட்டது. பின்னே, ஒரே பைக்கில் நான்கு பேர் சென்றால் பிடிக்க மாட்டார்களா. அப்புறம் எப்படி தப்பித்தார்கள் என்பதை ரிது எனக்கு சொல்லவில்லை.
அவளின் உலகத்தை விவரிக்க இந்த தளம் போதுமானதாக இருக்காது என்பதால், இத்துடன் நிறுத்தி உத்தேசித்திருக்கிறேன்(அப்பாடா).
என்ன சொல்வதற்காக இதை எழுதினேன் என தெரியவில்லை. ஆனால், குழந்தைகள் தெளிவாக இருக்கிறார்கள். எதை கடவுளிடம் சொல்ல வேண்டும்; அவர்களை எந்த அளவுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில்.
அவர்களும் கடவுளுடன் விளையாடுகிறார்கள்; நாமும் கடவுளை வைத்து(!) விளையாடுகிறோம்.
அடுத்த முறை அவள் வரும்போது, அனுவைப் பற்றி மேலும் விசாரித்து சொல்கிறேன். நீங்கள் பெங்களூரு போனால், சி.வி., ராமன் நகருக்கு விசிட் அடித்து, அனுவை நலம் விசாரியுங்கள்.

1 comments:

;) அனுவைப் பார்ப்பதற்காகவே பெங்களூர் போக வேணும் மாதிரி இருக்கு.

ரிதுக்குட்டிக்கு என் அன்பு. ;)

 

Post a Comment