பாற்கடல்...

இனியவை பிறக்கட்டும்...

சிறகும், நானற்ற நானும்...




முன்நோக்கி கீழ் வளைந்திருந்தன
மரக்கிளைகள்
மிக மெலிதாக வீசியபடி கிளைகளை
ஊடறுத்த காற்று,
வேம்பின் கசப்பை நாசித்துவாரங்களருகே
விட்டுச் சென்றது.

சட்டென குதித்தது என்முன்
கருடனின் ஒற்றை இறகு;
மிதப்பதும், வீழ்வதுமான வினாடிகளுக்கு முன்
நகைத்தது எனைப்பார்த்து.

வியப்பின் விலாசம் அகலாமல்
விளம்பினேன்
யார் நீ?

நீயற்ற நீயாக இருந்தால் சொல்கிறேன்,
குழப்பியது இறகு.

நான்... நான்... திணறிய பின்,
நீ யார் கூறியது கூறினேன்; ஓ, மன்னிக்கவும்,
வினவியது வினவினேன்.

நான் நானற்ற நான்...
மீண்டும் சிரித்தபடி கூறிற்று அது.

என்னிடம் கோபத்தை
எதிர்பார்த்திருக்க கூடும்; மௌனித்தேன்.

சரி நானொன்று கேட்கிறேன் சொல்,
"இறந்த காலத்தில் நிகழ்ந்ததை,
நீ நிகழ்காலத்தில் பார்க்கிறாய்'
கேள்வியை வீசி விட்டு பார்த்தது.

மௌனித்தேன்.

"ஒளி ஆண்டுகளுக்கு முன் உமிழப்பட்ட
நட்சத்திரங்களின் ஒளி இறந்த காலத்தில் நிகழ்ந்தது;
புவியை வந்தடைய தாமதமாகையால்,
நீ, நிகழ்காலத்தில் பார்க்கிறாய்'
விடையிறுத்தது.

என்னிடம் ஏன் சொல்கிறாய்?
முகம் சுருக்கினேன்.

ஏனென்றால், நான் "நானற்ற நான்'
விஷமமாக சிரித்தது சிறகு.

அருகிருந்த புளியமரத்தின் பூக்களை
உதிர்த்து விட்டு வந்த காற்று,
கருடனின் சிறகை
சுழற்றித் தூக்கிப் பறந்தது.

1 comments:

கவிதை நன்றாகவுள்ளது நண்பரே..

 

Post a Comment