பாற்கடல்...

இனியவை பிறக்கட்டும்...

ஒரு சகாவிடமிருந்து...

ஒரு சகாவிடமிருந்து...

....,
அன்புள்ள என்றா, அல்லது நண்பனே என்றா, எப்படி துவங்குவது என தெரியவில்லை. அதனால், உனக்கு பிடித்திரா விட்டாலும், உனது பெயரை முன்னிறுத்தி எழுதுகிறேன். தகவல் தொழில்நுட்பம் நேரில் பேசுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு வளர்ந்து விட்டிருந்தாலும், கடிதங்களின் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி விட முடியாது. இதை நீ கடிதமாகவே பாவிப்பாய் என எண்ணுகிறேன்.
பள்ளியில் சேர்ப்பதற்கு முதலில் இருந்து, துவக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, உடுமலை கல்லூரி, விடுதி, பட்டமேற்படிப்புக்காக தங்கியிருந்த அறை, கோவை கல்லூரி, புத்தக நண்பர்கள், ஏதேச்சையாக சந்தித்த மனிதர்கள் என எனக்கான வட்டத்தில் நிறைய சகாக்கள் இருக்கின்றனர்.
எத்தனை பேர் இருப்பினும், எனக்கான பக்கங்களில் உன்பெயரை எழுதாமல் தவிர்த்து விட முடியாது. குறிப்பிட்ட சில பேர் என் நெருங்கிய வட்டத்துக்குள் இருப்பார்கள். கல்லூரியில் ஆத்தி வகித்த இடத்தை, இங்கு நீ எடுத்துக் கொண்டாய் என எண்ணுகிறேன். ஒப்பிடுவது எனக்கு பிடிக்காது என்றாலும், இதை சொல்வதற்கு காரணம் இருக்கிறது. மற்றவர்களுக்கு கூட உதவி செய்திருக்கிறேன்; ஆத்திக்கு எதுவும் செய்ததில்லை. ஆத்தி அதை எதிர்பார்த்ததும் இல்லை.
என்னுடன் அவன் மூர்க்கத்தனமாக நட்பு பாராட்டினான். மூன்றாம் ஆண்டில், அவன் வாங்கி வந்த தின்பண்டத்தை நான் மற்றவர்களுக்கு கொடுத்து, அவனுக்கு கடைசியில் கொடுத்த போது, அவன் பார்த்த பார்வையும் லேசாக விடுத்த முணுமுணுப்பும் இன்னும் நெஞ்சில் வலிக்கிறது. அதற்குப்பின் மூன்றாண்டுக்குப் பின் அந்த இடத்தில் நீ இருக்கிறாய் என எண்ணுகிறேன்.
எங்கள் ஊரில் நான் கோபப்படாத பையன். ஆனால், எனக்கு மிக நெருங்கியவர்களுக்கு என் கோபம் பிரசித்தம். நீ என்னிடம் இருந்த அளவுக்கு நான் உன்னிடம் இருந்ததில்லை. இருக்கவும் தோன்றியதில்லை.
நீ ஒன்றை கவனித்திருப்பாயென நம்புகிறேன். சமீபத்திய உன் பிறந்தநாளின் போது, நான் உனக்கு வாழ்த்து சொல்லவே இல்லை. எப்படி சொல்வது எனவும் தெரியவில்லை. சில நேரங்களில் சம்பிரதாயங்களை நான் வெறுக்கிறேன்.
சிலவற்றில் எனது பிடிவாதத்தை நீ வெறுத்திருக்கக் கூடும். ஆனால், என் வளர்ப்பு நிலை அப்படி. "தோழமையோடும் ஏழமை பேசேல்' எனக்கூறி வளர்க்கப்பட்டேன். எனக்குள் இருக்கும் சுயம், யாரிடம் தாழ்ந்து நிற்க அனுமதிப்பதில்லை. அது ஒருவகையான பைத்தியகாரத்தனமாக கூட இருக்கலாம். நான் இறங்கிப் போயிருக்கிறேன் என்றால், அப்போது என்னை அதிகபட்சமாக சமாதானப்படுத்திக் கொண்டிருக்கக் கூடும்.
ஓ... இந்த கடிதம் பாதை மாறி விட்டது.
நீ என்னிடம் இருந்த, இருக்கும் அளவுக்கு நான் உன்னிடம் இருந்ததில்லை. இருக்கவும் தோன்றியதில்லை. அப்படி இருக்க முயற்சியும் செய்ததில்லை. என் கோபங்களுக்கு நீ ஆளாகும் போது, பின்னர் யோசிக்கையில் அது அதிகப்படியானதோ என எண்ணத் தோன்றுகிறது. என் பத்திரிகை உலக வாசம் நிறைய அற்புத தருணங்களை, வேடிக்கையான சம்பவங்களை, மறக்க முடியாத நிகழ்வுகளை, நெருக்கமான உறவுகளை தந்திருக்கிறது.
மிக நெருங்கிய, நெருங்கிய, ஆத்மார்த்த, ஆலோசனை கேட்கின்ற, மடிசாய்ந்து அழுகிற, பிரதிபாசம் எதிர்பார்க்கிற, விவாதம் நடத்த தகுதியுடைய, ஏதேனும் கற்றுக்கொள்ள, சிரிக்க மட்டும், உபயோகப்படுத்திக் கொள்ள இன்னும் இத்யாதி, இத்யாதியினர் என்னுடனான உறவு வட்டத்தில் இருக்கின்றனர்; இருப்பர்.
இதில் ஏதாவது ஒன்றாகத்தான் நீயிருப்பாய், என அடையாளமிட்டுக் காட்ட இதைச் சொல்லவில்லை. இவற்றில் நீ எந்த ரகம் எனவும் அடையாளப்படுத்த கூறவில்லை.
ஒன்று மட்டும் நிச்சயம். நீண்ட ஆண்டுகளுக்கு பிரிந்திருக்க வேண்டியிருந்தால், என்றாவது ஒரு நாள் உன் நினைவு வரும் போது சிறு புன்னகையும், கனத்த மௌனமும் நிச்சயம் என்னுள் எழும்.
இன்னொன்றையும் நினைவில் கொள், ஏதேனும் தவறு செய்திருந்தால், அதற்காக உன்னிடம் மன்னிப்பு கோரவும் மாட்டேன். ஏனென்றால், நான்...... நான்தான்.

திருப்தியுடன்...
நான்.
(நவ.,2009)

5 comments:

சிற்ச்சில இடங்களில் நான் என்னையும் பொருத்திக்கொள்ளவேண்டியிருக்கிறது. இன்னும் சிற்ச்சில இடங்களில் சில சகாக்களைப் பொருத்திப் பார்க்கிறேன். சுயம்...சுயம்...சுயம்..இதற்காக எல்லாவற்றையும் தொலைத்தவர்கள் அனேகம்.இதை மட்டும் தொலைத்து நிறையப் பெற்றவர்கள்,பெற்றுக்கொண்டிருப்பவர்கள் அனேகம்^3.

 

@சு.சிவக்குமார்.
நாம் நாமாக வாழ்வதில் சிக்கல் இருக்கிறது. சுயத்தை இழந்த பின் நிறைய பெற்று என்ன பயன். நம்மை எந்த வட்டத்திற்கும் சிறைப்படுத்த வேண்டாம்; எந்த சாயமும் நம்மீது பூசப்பட வேண்டாம். அதேசமயம் நமக்கே நமக்கான அடையாளமே சுயம். அதை யாருக்காகவும், எதற்காகவும் இழந்து விட சிலர் விரும்புவதில்லை.

 

Post a Comment