பாற்கடல்...

இனியவை பிறக்கட்டும்...

அசுண வேட்டை


கனவுகளுக்கு அர்த்தம்
சொல்பவர்களைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்
உங்களுக்கேனும் தெரியுமா?

யாருமற்ற மணல்வெளியில்,
நீலப்பெரு வெளி நோக்கி
ஊன்றப்பட்ட இரு ஏணிகளில்
ஒன்று குட்டை
மற்றது சற்று நெடிது.

அதில் ஏற வேண்டும் எனக்கு
பற்றுக் கோடில்லா வெளியில்
அவைகளின் உயரம்
கட்டை விரல்களுக்கே போதா.
வாளிகளில் மொண்டு மொண்டு
நீருற்றினேன் ம்ஹூம்...
அப்போதும் வளரவில்லை அவை.

சோர்ந்து போயிருந்த கைகள்
இறகென நீள்வதாகப் பட்டது.
ஆம் என் கழுத்து நீண்டு
மூக்கு அலகாகி
நான் இப்போது பறவையாகிருந்தேன்.

வெறும் பட்சியல்ல,
இசை பிரித்தறியும் அசுணம்.
அப்போது அவன் வந்தான்
ராகத் தானியங்களை
வீசியபடி.
லயம் மாறா மொழிகளில்
லயித்திருந்தது மனம்

ஏணியின் சட்டத்தில்
பற்றியிருந்த வளைநகம்
நழுவும் வேளையில்,
திடுமன முழங்கிய
பறை தாறுமாறாக
சப்தித்தது;
வீறிட்டது யாழ்.
பதைபதைத்து
என் உயிர் வழிகையில்,
தந்தி நரம்புகளை
முறுக்கேற்றி தெறிக்க வைத்த
அவன் கண்களில் தெரிந்தது
குரூரம்.

கனவுகளுக்கு அர்த்தம்
சொல்பவர்களைத்
தேடிக்கொண்டிருக்கிறேன் நான்.










0 comments:

Post a Comment