
இரவின் நிசப்தம் கலைந்து விடாமல்
களையப்பட்டன அணிகலன்கள்;
ஆடைகளும் பாரமோ,
உரியப்பட்டன துகில்கள்.
கழல், குண்டலம், கணையாழி
இத்யாதி இத்யாதிகள்;
எவையெல்லாம் பாரமாகுமோ
அவையெல்லாம் அகற்றப்பட்டன,
இதந்தரு மனையும், மனையும் நீங்கினான்.
வெண்ணிப்பறந்தலையில் பிறர் வெட்க,
போர்புரிந்த கரிகாலனின்
திருப்தி இருந்தது முகத்தில்;
புதிதாய் பிறந்தது போல், எதுவும் இல்லாமல்.
உயிரற்ற சுமைகள், உணர்ச்சிகள் அகன்ற பின்
சுமப்பதற்காகவே இருந்த புரவி
பின்தொடர்ந்தது நிழலாய்; நள்ளிரவிலும்.
தண்ணொளி பட்டு மின்னிய
ஆற்றின் கரையில்
இறுதியாய் புரவியையும் நீங்கினான்;
புரவி இறக்கி வைத்தது உடல் சுமையை;
அவன் கால்களை நாவால் ஈரப்படுத்திய பின்;
தன் உயிர்ச் சுமையையும்.
சித்தார்த்தன் புத்தன் ஆவதிலும்
இருக்கிறது சிக்கல்
இறக்க வேண்டி இருக்கிறது
'கண்டக' குதிரைகள்.
குறிப்பு:சித்தார்த்தன் குதிரையின் பெயர் கண்டகம்