பாற்கடல்...

இனியவை பிறக்கட்டும்...

பாலியல் தொழிலை அங்கீகரிக்கலாமா வேண்டாமா?

ஒரு பாலியல் தொழிலாளி பங்கேற்ற விவாத அரங்கின் தொகுப்பில் இருந்து இவை தரப்பட்டுள்ளன. மிக நீண்ட, சிந்திக்க வேண்டிய விவாதம் என்பதால், இரண்டு பதிவுகளாக இட உத்தேசித்துள்ளேன் நண்பர்களே. ஜமீலாவின் பேச்சில் மலையாளவாடை இருந்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை.


பாலியல் பற்றிய விவாதம் தேவையா, இல்லையா என்பதே விவாதத்துக்கு உரிய ஒன்றாகி விட்டது. தயங்கித் தயங்கி முணுமுணுக்கப்பட்ட ஒரு விஷயம் இன்று அரங்க விவாதத்துக்கு வந்து விட்டது. நாளை வீதிக்கும் வரும்; வர வேண்டும். இதற்கெல்லாம் காரணகர்த்தா எய்ட்ஸ். எச்.ஐ.வி., விழிப்புணர்வு, உயிர் பயம் என்ற பின்னரே, உலகுக்கு பாலியல் தொழில் குறித்த விவாதத்தின் மீது அக்கறை வந்தது.
இருளோடு தொடர்புடையதல்ல பாலியல் என்ற அடிப்படையில் சமீபத்தில் அனல் பறக்கும் விவாதத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது, திருப்பூர் "பதியம்' அமைப்பு.
விவாதத்தில் முக்கிய அங்கம் வகித்தவர் நளினி ஜமீலா; கேரளத்தைச் சேர்ந்த பாலியல் தொழிலாளி. அவர் எழுதிய சுயசரிதை புத்தகம், பெண்ணியம் பேசுபவர்களையும், முற்போக்குவாதிகளையும் திரும்பி பார்க்க வைத்தது. இத்துறையின் மீதான பலரின் கவனத்தையும் திகைக்கச் செய்து ஈர்த்தது.
குளச்சல் மு.யூசுப் "நளினிஜமீலா ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை' என தமிழாக்கம் செய்துள்ளார். புத்தகத்தின் மீதான கருத்துப்பதிவாக துவங்கி, பாலியல் தொடர்பாக அனல் பறக்கும் விவாதமாக மாறியது அந்நிகழ்ச்சி.
பெரிய அளவில் பெண்கள் பங்கேற்காத போதும், இளம்பெண்கள் சிலர் பங்கேற்றனர். சங்கோஜமின்றி அவர்கள் பங்கு பெற்ற வி(வா)தம் இளைய தலைமுறையின் விசால அறிவை வெளிக்காட்டியது. முதலில் ஜமீலா பேசினார். பின்னர் தொடங்கியது விறுவிறு விவாதம்.

ஜமீலா பேசியதிலிருந்து...
கேரளாவில் 33 ஆண்டுகள் பாலியல் தொழிலாளியாக இருந்தேன். எச்.ஐ.வி., விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சியில், மற்ற துறையினர் வெட்கப்பட்டு ஒதுங்கிக் கொள்ள, அரசுக்கு எங்களின் உதவி தேவைப்பட்டது.
"நான் ஒரு பாலியல் தொழிலாளி' என்று சொல்லிக் கொள்வதில் சங்கடம் இருந்தது. ஆனால், விருப்பப்பட்டு யாரும் இத்தொழிலுக்கு வந்து விடுவது இல்லை. விபத்தாக, காலச்சூழ்நிலையின் விளைவாக இதில் தள்ளப்படுகிறோம்.
ஆனால், சமூகம் எங்களைக் குற்றவாளியாக மட்டுமே பார்த்தது; பார்க்கிறது. விருப்பமில்லாத ஒருவரை எங்களுடன் உறவு கொள்ள அழைத்து விட முடியாது. இதுகுறித்த வழக்கில், ஆண்களை விட்டு விட்டு, பெண்களை மட்டும் அரசுத்துறை தண்டிக்கிறது.
போலீசார் எங்களை அடித்து, பணத்தைப் பறித்துக் கொண்டு, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி, பிறகே கோர்ட் மூலம் தண்டனை பெற்றுத் தருகின்றனர். ஒரு தவறுக்கு, அதுவும் எங்கள் மீது திணிக்கப்பட்ட தவறுக்கு, நான்கு முறை தண்டனை பெறுகிறோம். என் வாழ்க்கையை எழுதும் போது, இப்புத்தகம் எனக்கு ஒரு அங்கீகாரத்தைத் தரும் என்றோ, சுதந்திரத்தைத் தரும் என்றோ எனக்குத் தெரியாது.
ஆணாதிக்கம் பேசும்போது, பெண்களுக்கும் சேர்த்து வேலை செய்தல், பாதுகாப்பு என்று பல விஷயங்கள் உள்ளடங்கி உள்ளன. ஆனால், பெண்களுக்கு சுதந்திரம் என்று வரும்போது மட்டும், வீட்டுக்குள் அடங்கிக்கிட; சமையலறையே உன் கதி என்று சொல்லி விடுவர். ஆனால், எங்களைப் போன்ற பாலியல் தொழிலாளர்கள், ஆண்களின் அடக்குமுறை இல்லாததால், நிறைய சுதந்திரத்துடன் உள்ளோம். அதற்காக, எல்லா பெண்களும் பாலியல் தொழிலாளியாக மாறி, அதற்குப்பின் சுதந்திரமாக இருப்பது என்று அர்த்தமில்லை.
இந்த விவாத அரங்கிற்கே, பெண்களை யாரும் அழைத்து வரவில்லை. சினிமாவுக்கு உங்கள் பெண்களை அழைத்துச் செல்லாமல்தான் இருக்கிறீர்களா. "இந்த மாதிரி விஷயத்தை எல்லாம் நீ கேட்கக்கூடாது. நாளை பாலியலைப் பற்றி பேசினால், என்னால் பதில் சொல்ல முடியாது' என்ற பயம் இருக்கிறது.

ஆண்களுக்கு பாலியல் பற்றித் தெரியவில்லை என்று சொல்லவில்லை. ஆனால், பொது இடத்தில் அதைப் பேசலாமா கூடாதா என்ற தயக்கம் இருக்கிறது.
பாலியல் உறவு என்பது இருட்டறையில் மட்டும் நடக்கக்கூடியது; இரண்டு பேருக்கு தெரிந்து மூன்றாவது நபருக்கு தெரியக்கூடாத விஷயம், என்ற அளவில்தான் இருக்கிறது. ஆனால், அதைப்பற்றி பொண்டாட்டிக்கு புருசனோடு பேசுவதற்குக்கூ கூட அவகாசம் இல்லை. "ஆணுக்கு தெரிந்ததற்கும் மேல் அவங்களுக்குத் தெரிந்தால், அது எங்கிருந்து தெரிந்தது என்ற சந்தேகம் வரும். பொண்டாட்டிக்கு எப்படித் தெரியும். யார் சொல்லித் தந்தது' என்ற கேள்வி எழும்.
என்வாடிக்கையாளர்களிடம் விளையாட்டுத்தனமாக கேட்டதுண்டு. நீங்கள் இப்படி வருவது உங்கள் பொண்டாட்டிக்குத் தெரியுமா என்று.

"அப்பப்பா அப்படி நெனைக்கக்கூட முடியாதுன்னு' சொல்வாங்க. ஏன் உங்கள் மனைவிக்கு அந்தமாதிரி உணர்வே இல்லையா என்று கேட்டால், அவளுக்கு தெரிந்தால், ஆயிரம் கேள்வி கேட்பாள், அதற்கு என்னால் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது, என்பர்.
ஆனால், அதே ஆண்கள் பாலியல் தொழிலாளியுடன் உறவு கொள்ள வரும்போது,
"உனக்கு ஏன் இந்த செக்ஸ் பற்றி தெரியவில்லை; அந்த செக்ஸ் பற்றி தெரியவில்லை, ஏன் இந்த மாதிரி உறவு கொள்ளக்கூடாது, அது ஏன் உங்களுக்குத் தெரியவில்லை' என்று, நிறைய கேள்வி கேட்பார்கள்.
ஆனால், இதையே நாங்கள் திருப்பிக் கேட்டால் பதில் கிடைப்பதில்லை. எங்களுக்கே பதில் கிடைக்காத போது, குடும்பப் பெண்களுக்கு எப்படிப் பதில் கிடைக்கும்.
மத்த எந்த விஷயத்துக்கு உரிமை இருந்தாலும், இல்லாவிட்டாலும் கூட, பாலியல் நோய்களைப் பற்றிய விழிப்புணர்வுக்காக, பாலியல் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். பாலியல் உறவு என்றால் என்ன, எந்த சமயத்தில் உறவு கொள்ளக்கூடாது, யாருடன் உறவு கொள்ளக்கூடாது; நம்மீது பாலியல் தாக்குதல் நடந்தால் எப்படி சமாளிப்பது, என்பன போன்ற அறிவு பெண்களுக்கு, குறிப்பாக சிறுமிகளுக்கு வேண்டும்.
அந்தக்காலம் போல இல்லை இப்போது. பெண்கள் இரவில் தனியாக பயணம் செய்ய வேண்டியுள்ளது. பாலியல் வன்முறைகளை தவிர்க்க, அந்த தொழிலில் இளம்பெண்கள் தள்ளப்படுவதை தவிர்க்க, பாலியல் குறித்து விவாதிக்க வேண்டும்.


பாலியல் பற்றி பேசுபவர்களும்; அதுபற்றி தெரிந்தவர்களும், பாலியல் தொழிலாளி, அவர்களின் வாடிக்கையாளர்கள் என்று கருதக்கூடாது. பாலியல் பற்றி விஷயம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, எங்களிடம் வெறுமனே பேசிச் செல்வதற்காக வருபவர்களும் உண்டு.
பாலியல் தொடர்பாக பொதுக்கூட்டத்தில் விவாதிக்க ஆசைதான்; வேறு வழியில்லாத போது சிறு அரங்கங்களில் விவாதிக்கலாம். "ச்சீ போ' என்று பாலியலைப் பற்றி சொன்ன காலம் முடிந்து போய்விட்டது. இணையத்துக்குள் சென்றால், தேவையானவை கிடைத்து விடுகிறது. புத்தங்களும் உள்ளன.
பாலுறவு, சுயஉணர்வுகள், உடல்நலம் பற்றியும் பகுத்துணர வேண்டியுள்ளது.

இந்தப்புத்தகம் எழுதியதற்கு வேறொரு கோணமும் உள்ளது. அடுத்ததலைமுறைக்கு, இந்தமாதிரியான ஒரு பிரச்னை உள்ளது என்று தெரியவைக்க வேண்டும்.
இதைப்படிக்கும் இளையதலைமுறையினர் அதிகாரிகளாகும் போது, "பாலியல் தொழிலாளிகளைப்பற்றியும், அவர்களின் குழந்தைகள், அவர்களுக்கான பிரச்னைகள் என்ன, எப்படித்தீர்வு காண்பது' என, சிந்திப்பார்கள்.
2010 ல்கூட இதுபற்றி விவாதிக்கக்கூடாது என கட்டுப்படுத்தி வைத்துக் கொண்டிருக்கக்கூடாது. அப்படி என்றால் நமக்கு விழிப்புணர்வு வரவில்லை என்றுதான் அர்த்தம்.
கேரள பல்கலையில், என் புத்தகம் உயர்கல்வி பாடத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதற்கு சில எழுத்தாளர்கள் "ஷேக்ஸ்பியர் அவுட்; நளினி ஜமீலா இன்' என விமர்சித்தனர். ஷேக்ஸ்பியர் எழுதியது என்ன; நளினி ஜமீலாவின் வரலாறு என்ன, என்றுகூட வித்தியாசம் தெரியாதவர்கள் இருக்கிறார்கள். பாலியல் வன்முறையில் இருந்து தற்காத்துக் கொள்ளவும், தன் உணர்வுகள் பற்றி தெரிந்து கொள்ளவும், பாலியல் அறிவியல் பாடம் அவசியம் என, ஜமீலா முடித்தார்.

தமிழக அரசின் கவனத்திற்கு...

தமிழில் பதிப்பிக்கப்படுமா ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புகள்


தமிழக வரலாற்றில் 18ம் நூற்றாண்டில் நிகழ்ந்தவற்றைப் படம் பிடித்துக்காட்டும் ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புகள், தமிழில் முழுமையாகப் பதிப்பிக்கப்படவில்லை. ஐரோப்பியர்களால் மட்டுமே தமிழ் உரைநடை வளர்ச்சி இருந்தது என்பதை மறுக்கும் விதமாக கிடைக்கப்பெற்ற இந்தச் சான்றாவணம், ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் மட்டுமே முழுமையாக கிடைக்கிறது. தமிழில் எட்டுத் தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் இந்த நாட்குறிப்புகளைத் தமிழில் முழுமையாக பதிப்பிக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் 18ம் நூற்றாண்டு குழப்பமான சூழல் நிலவிய காலம். தஞ்சையில் மராத்தியரும், ஆற்காட்டில் நவாபும், சென்னையில் ஆங்கிலேயரும், புதுவையில் பிரெஞ்சுக்காரர் ஆட்சியும் ஒரே காலத்தில் நடந்தன. இதுதவிர, நாகை மற்றும் பரங்கிப்பேட்டையில் டச்சுக்காரர்களும், தரங்கம்பாடியில் டேனிஷ்காரர்களும், ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.
இக்காலத்தில் நிலவிய அரசியல், சமூக சூழ்நிலைகளை நாம் அறிந்து கொள்ளும் வகையில், சில நாட்குறிப்புகள் கிடைத்துள்ளன. அவை, 18ம் நுõற்றாண்டில் புதுவையில் வாழ்ந்த ஆனந்தரங்கம்பிள்ளை(1709-1761), ரெங்கப்பத் திருவேங்கடம்பிள்ளை(1737-1791), இரண்டாம் வீராநாயக்கர், முத்துவிஜய திருவேங்கடம்பிள்ளை(1777-1801) ஆகியோரின் நாட்குறிப்புகளே ஆகும்.

இதில் மிகவும் குறிப்பிடத்தக்கது ஆனந்தரங்கம்பிள்ளையின் நாட்குறிப்பு. இவர், பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கம் புதுவையில் காலுõன்ற முக்கியப்பங்கு வகித்த டூப்ளே என்பவரிடம், மொழிபெயர்ப்பாளராக பணியாற்றியவர்.
இந்தநாட்குறிப்பு 1736ம் ஆண்டில் இருந்து 1761ம் ஆண்டு வரையிலான கால்நூற்றாண்டுகாலச் செய்திகளை நமக்குத் தருகிறது.
அப்போதைய காலகட்டத்தில் நிலவிய அரசியல்சூழ்ச்சிகள்; சமுதாய நிகழ்வுகள், கலகங்கள், முற்றுகைகள்; கப்பல் போக்குவரத்து, வர்த்தகம்; முகலாயர் மற்றும் நவாபுகளின் தர்பார், ஆங்கிலேயரின் போக்கு, பிரெஞ்சுக்காரர்களின் அரசாளும் முயற்சி; புதுவை, ஆற்காடு, வந்தவாசி, திருச்சி, ஐதராபாத், தில்லி பகுதிகளில் நடந்த முக்கிய நிகழ்வுகள்' மக்கள் பட்ட சிரமங்கள், அன்னியர்கள் அடித்த கொள்ளை; அக்கால பிரமுகர் வரலாறு, போர்தந்திரங்கள் என, பல்வேறு தகவல்களும் வழக்குத் தமிழிலில் எழுதப்பட்டுள்ளன.
இந்தநாட்குறிப்புகளை, 1836ல், பிரெஞ்சு வருவாய்த்துறை அதிகாரி அர்மோன்கலுவா மொபார், ஆனந்தரங்கம் பிள்ளையின் வீட்டில் இருந்து கண்டறிந்து, நகலெடுத்தார். அதுவார் ஆரியேல் என்ற பிரஞ்சுக்காரரும் 1850ம் ஆண்டு நகலெடுத்தார். இரு நகல்களும் பாரிஸ் தேசிய நுõலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
முதன்முறையாக எடுக்கப்பட்ட நகலில் இருந்து, மற்றொரு நகலைத் தயாரிக்கும் பணியை சென்னை ஆவணக்காப்பகம் மேற்கொண்டது. இப்பணி 1892ல் துவங்கி 1896ல் முடிந்தது. இந்நகல், தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் உள்ளது.
இந்நகலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, அப்போதைய சென்னை அரசாங்கம் வெளியிட்டது. 1894ம் ஆண்டு முதல் 1928ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், இத்தொகுதிகள் ஆங்கிலத்தில் வெளிவந்தன. பின்னர் கடந்த 1948ம் ஆண்டில் இருந்து 1963ம் ஆண்டு வரை, தமிழில் தொகுதிகள் வெளியிடப்பட்டன. ஆனால், 1736 செப்., 6ம் தேதி முதல், 1753 செப்.,8ம் தேதி வரையான நாட்குறிப்புகள் மட்டும் எட்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. அதற்கு பிந்தைய 1761 ஜன.,12ம் தேதி வரையிலான நாட்குறிப்புகள் இதுவரை தமிழில் வெளியிடப்படவில்லை.
தமிழில் எழுதப்பட்ட, முக்கியத்துவம் வாய்ந்த நாட்குறிப்பு ஆங்கிலத்திலும், பிரெஞ்சிலும் முழுமையாக கிடைக்கிறது. ஆனால், தமிழில் எட்டு தொகுதிகள் மட்டும் கிடைப்பது வேதனைக்குரிய ஒன்று.
இந்தநாட்குறிப்புகளில் சிலவற்றை பதிப்பித்துள்ள ஜெயசீலன், ""ஐரோப்பியர்கள் மட்டுமே தமிழ் உரைநடை வளர்ச்சியில் பெரும்பங்கு ஆற்றினர் என இதுவரை கொண்டிருந்த கருத்து மாற்றப்பட வேண்டும்,'' என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
18ம் நுõற்றாண்டில் வழங்கிய தமிழ் உரைநடையை காட்டும் ஒரு ஆவணம் தமிழில் வெளியிடப்படாதது மிகப்பெரும் குறை. கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற உள்ள நிலையில், முழுக்க முழுக்க தமிழில் எழுதப்பட்ட ஆவணம் ஒன்றை, தமிழில் முழுமையான தொகுதிகளாக வெளியிட அரசு முன்வர வேண்டும்.

குழூஉக்குறி

முறி,
துருவம்(வாச்சை),
காளை(எசவு),
தொழுவு,
பனையம்,
தட்டை,
பொருத்து,
ஆழி,
வலுவு,
தாயம்,
துருவம்...

பள்ளிப்பக்கம்
ஒதுங்காத
தம்பான்
சரளமாக
மாட்டை விலை
பேசிக்கொண்டிருந்தான்.

அரைலட்சம் சம்பளத்தில்
பேராசிரியர் சொன்ன
குழூஉக்குறி
நகைக்கிறது என்னை.

தாழற்ற கழிப்பறை



கண்கள் மட்டும் தெரியும்
முகக் கவசமணிந்து,
கருநிறப் புரவியில் ஆரோகணித்து
வருவாய் என கற்பிதம் செய்திருந்தேன்.
நீயே முகத்துக்கு மட்டும்
கவசம் பூண்டிருந்தாய்.

கைக்குப்பதிலாக கொடுநாவில்
வைத்திருந்தாய்
வார்த்தைச் சாட்டைகளை.
எனக்காக உலகை விலை பேசுவாய்
என்றிருந்தேன்; நீயும் பேசினாய்
உனக்கான விலையை.

தொலைபேசி அழைப்புகளோடு
ஒப்பிடுகையில்,
என் கண்களின் அழைப்பை
கவனிக்க நேரமில்லை உனக்கு.
நின்று, நிதானித்து,
உள்ளுக்குள் பிரவகித்து,
உட்புகுந்து, வெளிவந்து,
எழுந்து, மூழ்க
வேண்டும் எனக்கு;

நீயோ
அவசர கதியில்
மென்று துப்பிவிடும்
வேகத்தில் இயங்குவாய்.
உனக்குள் ஏதோ ஒன்று
விழித்துக் கொள்ளும்போது
எனக்குள் ஒன்று
உடைந்து கொள்கிறது.

அந்த நேரங்களில்
தாழற்ற கழிப்பறையில்
இருப்பதாக
உணர்கிறேன் நான்.

அவரோகணம்




அவரோகணத்தில் இருந்து
ஆரோகணத்துக்குச் சென்று
நிறுத்திய போது,
சில வினாடிகள்
சலமனற்று, பின்
சப்தித்தது சபை.

மனம் நிறைந்த
பூரிப்பும்,
முன்கை சுமந்த
மாலையுடனும்
இல்லம் நுழைந்த
என்னை,
"ஒரு கப் காபி கொடேன்'
என்ற உன் குரல்
வரவேற்றது.

உங்கள் ஊருக்கும் காந்தி வந்திருக்கிறாரா?

காந்திக்கு இன்னும் மவுசு குறையவில்லை. அதுதான் காந்திபடம் போட்ட நோட்டு இருக்குல்ல என்கிறீர்களா. நான் அதைச் சொல்லவில்லை.

கடந்த 2009ம் ஆண்டு அதிகம் விற்பனை செய்யப்பட்ட தமிழ்ப்புத்தகம் எது தெரியுமா? "தமிழ்நாட்டில் அண்ணல் காந்தியடிகள்'; 27ஆயிரம் பிரதிகள்.
எழுதியவர் வி.டி. சுப்ரமணியன்(9443179028: 04212477228). திருப்பூர் கலை இலக்கியப் பேரவை வெளியிட்டுள்ளது.

இருக்கட்டுமே அதனால் என்ன என்றுதான் எனக்கும் முதலில் தோன்றியது. அப்படி என்னதான் அந்தப் புத்தகத்தில் இருக்கிறது என்று பார்க்க புத்தகத்தை வாங்கினேன். பத்து ரூபாய் என விலை போட்டிருந்தார்கள். அதை விட ஆச்சரியம் மொத்தம் இருபதே பக்கங்கள்.


முன் அட்டையின் உள்பக்கத்தில், 1925ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி திருப்பூருக்கு காந்தி வந்திருந்த போது எடுத்த படத்தையும், 1936ல் நேரு, 1937ல் பாபு ராஜேந்திர பிரசாத் ஆகியோர் திருப்பூர் வந்த போது எடுத்த படங்களை அச்சிட்டுள்ளனர்.


இரண்டாம் பக்கம் புத்தகம் பற்றிய குறிப்புரை. கூடவே, 1969ல் இந்திய அரசின் நூற்றாண்டு விழா தபால்தலை காந்தி படம் போட்டது. மூன்றாம் பக்கம் பதிப்புரை; நான்காம் பக்கம் தியாகி முத்துசாமியின் வாழ்த்துரை; ஐந்தாம் பக்கம் மதம் குறித்த காந்திகருத்து..... என்னடா இது வித்தியாசமா பக்கம் பற்றிய வர்ணனை, போரடிக்கிறதே.


உண்மையில் அதற்கு பிறகு ஒரே புள்ளி விவரங்கள் தான். 1896 டிச., 14ம் தேதி முதன்முதலில் தமிழகத்துக்கு வந்தார் என்பதில் துவங்கி, எந்தெந்த தேதிகளில் தமிழகத்தின் எந்ததெந்த பகுதிகளுக்கு விஜயம் செய்தார். எங்கு என்ன நிகழ்ச்சிகள் நடந்தன, என்பதை அவ்வளவு அழகாக தொகுத்திருக்கிறார் நூலாசிரியர்.


கம்யூ., கட்சியின் நல்லக்கண்ணு இதைப்படித்து விட்டு, "எங்க ஊருக்கு காந்தி வந்திருக்காரா? தெரியலையே' என சிலாகித்தாராம். அவ்வளவு துல்லியமான விவரங்கள் இதில் இருக்கின்றன. நூலாசிரியர் திருப்பூர்வாசி என்பதால், திருப்பூருக்கு காந்தியின் வருகை குறித்து தனியாக விளக்கி இருக்கிறார்.



அதுமட்டுமல்ல, எம்.எப்.ஹூசைன், ஆர்.கே. நாராயணன் போன்ற பிரபல ஓவியர்களால் வரையபட்ட காந்தியின் கோட்டோவியங்கள் ஆங்காங்கு இடம் பெற்றிருக்கின்றன.



காந்தி நூற்றாண்டு விழா ரஷ்ய நாணயங்கள், சிலி, பிரிட்டன், இத்தாலி, உகாண்டா, ரஷ்யா, அமெரிக்கா, காமரூன், மால்டா நாடுகளால் வெளியிடப்பட்ட காந்தி தபால் தலைகள் இடம் பெற்றிருக்கின்றன. அவர் உண்ணாவிரதம் இருந்த நாட்கள், சிறையில் இருந்த நாட்கள்(தென் ஆப்பிரிக்கா உட்பட) பிடித்த பாடல், பிடித்த மொழி(குஜராத்திக்கு அடுத்து தமிழ்தான் பிடிக்குமாம். அழகாக தமிழில் கையெழுத்தும் இடுவாராம்), காந்தியின் அஸ்தி திருப்பூரில் இருக்கிறது என, சுவாரஸ்ய தகவல்களுக்கும் பஞ்சமில்லை.



பாரத தேசத்தில் நான் எங்கு சென்றாலும் கதர் ஆடை அணிந்து கூட்டத்திற்கு வருபவர்கள் மிகவும் குறைவானவர்கள் என்பதை கவனித்திருக்கிறேன். ஆனால், தென்னிந்தியாவில் திருப்பூர் என்னும் ஊரில் பெரும்பாலான ஆண்களும், பெண்களும் கதர் ஆடை உடுத்தியிருந்தது நம்பிக்கை அளித்தது.

யங் இந்தியாவில் காந்தி எழுதியது.


"இந்தியாவின் கதர் லங்காஷையர் திருப்பூர்' "கதரின் தலைநகரம் திருப்பூர்' இவை திருப்பூர் பற்றிய காந்தியின் புகழாரங்கள்.



திருப்பூரில் அரிஜன நிதிக்காக காந்தியிடம் பணம் கொடுத்தவர்கள், அரிஜன மக்கள் அல்ல. கவுண்டர், அய்யர், செட்டியார், நாயுடு இனத்தவர்கள், என்ற தகவலையும் இதில் அறிய முடியும்.


வாய்ப்பு கிடைத்தவர்கள் படித்துப் பாருங்கள். ஒரு வேளை உங்கள் ஊருக்கும் காந்தி வந்திருக்கக் கூடும்.

மௌனத்தின் கோப்பை





ஒலிகள் கெட்டிப்பட்டு
கிடந்த சந்தை,
வெண்ணிற சிறகு விரித்த
தேவதையின் வருகையில்
நிர்ச்சலனமானது.

நீட்சி பெற்ற விரல்களால்
கோப்பை ஒன்றை வைத்தது
அத்தேவதை,
"வழியும் அளவுக்கு நிரப்புவோர்
முன்வரலாம்'
வார்த்தைகளை உதிர்த்து விட்டு
காத்திருந்தது.

இரவின் அந்தகாரத்தை எடுத்து வந்து
ஊற்றினான் தனிமை விரும்பி;
உள்ளே நுழைவதற்குள்
உலர்ந்து போயிற்று.

மயானத்தின் நிசப்தங்களை
திரட்டி வந்து கொட்டினான்
வெட்டியான்;
கால்வாசிக்குள்
காணாமல் போயிற்று.

வார்த்தைகளால் வரையறுக்க
இயலாததை
எப்படி விளக்க,
அகராதி தேடியது ஒரு புத்தகப்புழு.

"வழியும் அளவுக்கு மௌனத்தை
நிரப்ப முடியாது'
முணுமுணுத்தான் தர்க்கவாதி.

இவையும், இன்னபிறவும்
பயனற்று போக,
கூட்டத்தில் உ(ம)றைந்திருந்தது
மௌனம்.

யாரும் எதிர்பாராத
கணத்தில்,
நிர்வாணம் உடுத்திய
சிறுமியின் கொலுசொலியில்
நிரம்பி வழிந்தது
மௌனத்தின் கோப்பை.