பாற்கடல்...

இனியவை பிறக்கட்டும்...

சிறகும், நானற்ற நானும்...




முன்நோக்கி கீழ் வளைந்திருந்தன
மரக்கிளைகள்
மிக மெலிதாக வீசியபடி கிளைகளை
ஊடறுத்த காற்று,
வேம்பின் கசப்பை நாசித்துவாரங்களருகே
விட்டுச் சென்றது.

சட்டென குதித்தது என்முன்
கருடனின் ஒற்றை இறகு;
மிதப்பதும், வீழ்வதுமான வினாடிகளுக்கு முன்
நகைத்தது எனைப்பார்த்து.

வியப்பின் விலாசம் அகலாமல்
விளம்பினேன்
யார் நீ?

நீயற்ற நீயாக இருந்தால் சொல்கிறேன்,
குழப்பியது இறகு.

நான்... நான்... திணறிய பின்,
நீ யார் கூறியது கூறினேன்; ஓ, மன்னிக்கவும்,
வினவியது வினவினேன்.

நான் நானற்ற நான்...
மீண்டும் சிரித்தபடி கூறிற்று அது.

என்னிடம் கோபத்தை
எதிர்பார்த்திருக்க கூடும்; மௌனித்தேன்.

சரி நானொன்று கேட்கிறேன் சொல்,
"இறந்த காலத்தில் நிகழ்ந்ததை,
நீ நிகழ்காலத்தில் பார்க்கிறாய்'
கேள்வியை வீசி விட்டு பார்த்தது.

மௌனித்தேன்.

"ஒளி ஆண்டுகளுக்கு முன் உமிழப்பட்ட
நட்சத்திரங்களின் ஒளி இறந்த காலத்தில் நிகழ்ந்தது;
புவியை வந்தடைய தாமதமாகையால்,
நீ, நிகழ்காலத்தில் பார்க்கிறாய்'
விடையிறுத்தது.

என்னிடம் ஏன் சொல்கிறாய்?
முகம் சுருக்கினேன்.

ஏனென்றால், நான் "நானற்ற நான்'
விஷமமாக சிரித்தது சிறகு.

அருகிருந்த புளியமரத்தின் பூக்களை
உதிர்த்து விட்டு வந்த காற்று,
கருடனின் சிறகை
சுழற்றித் தூக்கிப் பறந்தது.

மணலாடிய குருவிகள்



ஒரு விடுமுறை நாளின் மாலை நேரம். தம்பி வீட்டுக்கு வெளியே போடப்பட்டிருந்த கட்டிலில் சிரமபரிகாரம் செய்து கொண்டிருந்தேன். என்னை தூங்க விடாமல் இம்சித்து, மேலே ஏறி, இறங்கி விளையாடிக் கொண்டிருந்த சுதீப்(என் சகோதரியின் இரண்டரை வயது மகன்) மேலே எதையோ பார்த்து விட்டு ஓடி வந்தான். ரகசியம் பேசும் குரலில் மாமா 'குவ்வி கூடு' என்று சுட்டிக்காட்டினான். சிட்டுக்குருவியின் கூடு இருந்தது அங்கே. ஆச்சரியமாக இருந்தது எனக்கு. காரணம் இரண்டு ஆண்டுகளாக காணாமல் போயிருந்த சிட்டுக்குருவி மீண்டும் கூடு கட்டியிருந்ததது.
நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் இறந்து போயிருந்த நடராசு அப்பிச்சி சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தது. "சிவனுக்கும் சிட்டுக்குருவிக்கும் பிறப்பு இறப்பில''.
சிலேடை வாக்கியம் அது; சிவன் பிறப்பு இறப்பு அற்றவன் என்பதையும், சிட்டுக்குருவியின் பிறப்பு இறப்பில் என்பதையும் சுட்டிக்காட்டும் வாக்கியம். இறப்பு என்பது வீட்டு இறவாரம். (ஓட்டு வீட்டுக் கூரையின் முன்பக்கம்; திண்ணை போன்ற பகுதியின் மேற்கூரைக்கு இறவாரம் என்று பெயர். கொங்கு நாட்டு மக்களின் பாஷையில் அது "இ(எ)றப்பு' ஆகி விட்டிருந்தது).

வழக்கமாக தம்பி வீட்டு இறவாரத்தில் சிட்டுக்குருவி கூடு இருந்து கொண்டே இருக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு முன் எதேச்சையாக பெரியப்பா முக்கால்வாசி கட்டிமுடித்த கூட்டை பிய்த்து எறிந்து விட, மீண்டும் கூடு கட்ட வரவேயில்லை சிட்டுக்குருவிகள். அருகருகே இரண்டு வீடுகள் இருந்தாலும், அந்தக்காலத்து வீடுகள் என்பதால், ஒவ்வொரு வீட்டின் முன்னும் கிணறுகள் உண்டு. எங்கள் வீட்டுக்கிணறு ஒரு காலத்தில் புழக்கத்தில் இருந்ததற்கு சான்றாக, தண்ணீர் இறைக்கும் உருளை போடுவதற்காக உயரத்தூக்கி நிறுத்தப்பட்டிருக்கும் இரண்டு பிரம்மாண்ட கல் தூண்கள் மட்டுமே சாட்சியாக இருக்கின்றன.
தம்பி வீட்டுக்கிணறு இன்னும் உபயோகத்தில் இருக்கிறது. அந்த கிணற்றினுள் சிட்டுக்குருவிகள் எப்போதும் கெக்கலிட்டுக் கொண்டிருக்கும். முற்றத்தில் காயப்போட்டிருக்கும் கம்பு, சோளங்களை கொத்தித் தின்ன வரும். ஒரே இடத்தில் அமராமல் துறுதுறுவென தாவிக் கொண்டிருக்கும் சிட்டுக்குருவியின் தலை ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் மூன்று திசைகளை நோக்கி பார்த்திருக்கும்; அவ்வளவு வேகம். சிட்டுக்குருவி நடத்தும் மண்குளியலை பார்த்தவர்கள் எளிதில் மறக்க முடியாது.
சமீபகாலமாக சிட்டுக்குருவிகளை பார்க்கவே முடியவில்லை. கிணற்றுக்குள் ஒன்றிரண்டு மட்டுமே இருக்கக்கூடும். நகர வாழ்க்கையில் விருந்தாளியை பார்ப்பது போன்று என்றாவது ஒருநாள் தரிசனம் தரும். சுதீப் சுட்டிக்காட்டிய பின்னரே, சிட்டுக்குருவி என்ற உயிரினத்தை ஏறக்குறைய மறந்து விட்டது நினைவுக்கு வந்தது.
இப்போதே சிட்டுக்குருவிகளை பார்ப்பது அரிதாகி விட்ட நிலையில், 20 ஆண்டுகளுக்கு பின் என்னாவாகும். மிருககாட்சி சாலையில் வைக்கும் அளவுக்கு பிரம்மாண்ட உயிரினமும் இல்லையே. அதைப்பற்றி கவலை கொள்ளவாவது யாரேனும் இருப்பார்களா என தெரியவில்லை. சுதீப்புக்கு சிட்டுக்குருவியை நான் காட்டி விட்டேன். அவன் மகன்/மகளுக்கு நேரில் காட்ட வாய்ப்பிருக்குமா? சிட்டுக்குருவிகளுக்காகவே, கோவில் முன்மண்டபங்களில் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும் நெற்பூங்கரகம்(நெற்கதிர்களால் அலங்கார விளக்கு போல் வடிவமைக்கப்பட்டு தொங்க விடப்பட்டு இருக்கும்) எந்தக்குருவியால் இனி தின்னப்படும்?
குருவி கூடுகட்டுவதை நேரில் காண வாய்ப்பு கிடைக்குமா? நேஷனல் ஜியாகிரபிக் சேனலில் மட்டுமே இனி சிட்டுக்குருவியை நம் வாரிசுகளுக்கு காட்டி, அட அங்க பாரு ஸ்பாரோ, க்யூட்டா இருக்கு இல்ல என சொல்லும் காலம் வரலாம். ஆனாலும் மணலாடும் சிட்டுக்குருவிகளை நேரில் பார்த்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

பின்குறிப்பு: புதிய கூட்டையும் பெரியப்பா பார்த்தார். பிய்த்து எறியவில்லை. "டே தம்பி, அந்த ஃபேனை கழட்டி வைங்கடா. குஞ்சு பொரிச்சு பறந்து போற வைக்கும், யாராவது போட்டுற போறங்க. அடிபட்டு செத்துப்போயிரப் போவுது பாவம்' என்றார் பேரனை தூக்கி கொஞ்சியவாறே.

ரிதுக்குட்டியும் அனு என்றொரு தோழனும்

பெங்களூரு சி.வி., ராமன் நகரில் கோவில் கொண்டுள்ள அனுமந்தராயர், அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கும், இன்னபிறருக்கும் கடவுள். கடவுள் வழிபாட்டில் நம்பிக்கை உடையவர்களில் 90 சதவீதத்தினரின் இஷ்ட தெய்வமாக ஹனுமன் இருப்பார். ஏனெனில் இந்துக்கடவுள்களில் பிரதானமான ராமனின் அடியவர்; சர்வ வல்லமை படைத்த கடவுள்; பெரும்பாலான ஜிம்களில் வலிமைக்கு உதாரணம். தமிழார்வம் மிக்கவர்களுக்கு சொல்லின் செல்வன். சில அரசியல் கட்சியினருக்கு பிரதான லோகோ. சுருக்கமாக சொல்லப்போனால், நோபல் பரிசுக்கு தகுதியுடையவரா இல்லையா என்ற சர்ச்சையில் சிக்கி இருக்கும், அமெரிக்க அதிபரின் இஷ்ட தெய்வமும் கூட.
இவ்வளவு பிரசித்தியும், சர்வ வல்லமையும் பெற்ற ஒருவர் உங்களுக்கு என்னவாக இருக்க முடியும். கடவுள் என்ற உறவைத் தவிர. ஆனால், இதைப்பற்றியெல்லாம் ரிதுவுக்கு தெரியாது; அதைப்பற்றிய கவலையும் இல்லை அவளுக்கு.
ஓ….. இதுவரை ரிதுவை அறிமுகப்படுத்தாமைக்காக மன்னிக்கவும். அவள் இந்த பூமிக்கு புதுவரவு; ஜஸ்ட் 12 லட்சத்து 74 ஆயிரத்து 41 நிமிடங்களே ஆகின்றன. கணக்கிட சிரமமாக இருக்கிறதா; ரிது(ரிதன்யா) 29 மாதங்களான அழகிய குட்டி தேவதை.
ரிதுவை பொருத்தவரை ஹனுமான், ஹனு ஆகி, அனு ஆகி விட்டிருக்கிறார். தன் வயதொத்த சிறு தோழனாகவே பாவிக்கிறாள். தன் வயதொத்த, என்று நாமாகத்தான் எண்ணிக் கொள்ள வேண்டும். ஏனெனில், அவள் எங்கு சென்றாலும், அனு அவளின் தோளில் அமர்ந்திருப்பான், அல்லது பின்னால் வந்து கொண்டிருப்பான். ( ஆஷ்டான அனுபூதிகள் மன்னிப்பார்களாக). அவ்வளவு சிறிய உருவத்துக்கு இரண்டு ஆண்டுகள் வயது இருக்குமா என்ன?
என்னதான் பிரெண்டாக இருந்தாலும், கிண்டர்ஜாய்(குழந்தைகளுக்கு பிடித்தமான தின்பண்டம்) வாங்கினால், அனுவுக்கு கிடையாது. தான் “புஸ்“(இயற்கை உபாதைக்கு, ரிது வைத்திருக்கும் பெயர்) போனதையும் அனுவிடம் யாரும் சொல்லக்கூடாது.
அம்மா வலிக்குது, அனுக்கிட்ட ச்சொல்லுங்க( எதுவாயினும், அனுவிடம் சொன்னால் சரியாக போய்விடும் என்பது, ரிதுவின் நம்பிக்கை). உறங்கும் போது, அனுவும் உடன் பள்ளிகொள்வான். இன்னும் ரிதுவுக்கு வரைய தெரியாது என்பதால், அனுவை எந்தமாதிரி கற்பனை செய்து வைத்திருக்கிறாள் என தெரியவில்லை. ஒரு வேளை குஷிவாலி கபீஷ் மாதிரி இருக்க கூடும்.(கபீஷ் குறும்பும், புத்திசாலித்தனமும் நிறைந்த ஒரு குரங்கு- காமிக்ஸ் ஹீரோ)
யார் மீதும் கோபம் வந்தால், ரிது உடனே அனுவிடம் சொல்லிவிடுவாள். சில சமயங்களில் அனுவுக்கும் சேர்த்து திட்டு கிடைக்கும்.
குழந்தைகளுக்கான உலகம் தனி. எல்லாவற்றையும் குழந்தைத்தனமாகவே அணுகுகிறது. அது கடவுளாகவே இருக்கட்டுமே; அதனால் என்ன?
ரிதுவுக்கு மேலும் சில நண்பர்கள் உண்டு. அவர்களும் அனுவோடு தொடர்புடையவர்களே. அத்தனை பேருமே அவளின் பரந்து விரிந்த கற்பனை ராஜ்ஜியத்துக்கு உரியவர்கள்.
ச்சிம்ப்பு(சிம்பன்சி என்பதன் சுருக்கம் தான் அது தமிழ் நடிகர்கள் யாராவது நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல); சுக்ரீவன்தான் சிம்பன்சி ஆகி, ச்சிம்பு ஆகியிருக்கிறார். அடுத்த கற்பனை கேரக்டர் ராமாயணம். மற்ற இரு நண்பர்களையும் குரங்கு வடிவில் கற்பனை செய்து கொள்ள முடியும். ஆனால், ராமாயணத்துக்கு என்ன உருவம் கொடுக்க முடியும். ஆச்சரியப்படத்தக்க வகையில் ரிதுவால் முடிந்திருக்கிறது.
அண்ணனும், அண்ணியும் வேலைக்கு சென்று விட(வெல்கம் டூ தி கார்பொரேட் வேர்ல்டு) அம்மம்மாவுடன் இருக்கும் ரிது, இந்த மூவருடனும்தான் விளையாடுவாள். உங்களுக்கு தெரியுமா, அப்பாவின் கார் அவளுக்கு பிடித்தமான ஒன்று. ஆனால், பிரண்ட்ஸ்களுடன் பைக்கில் போவதுதான் அவளுக்கு பிடிக்கும், ஒரு முறை ரிது, அனு, ச்சிம்பு, ராமாயணம் நான்கு பேரும் பைக்கில் போன போது, போலீஸ் பிடித்து விட்டது. பின்னே, ஒரே பைக்கில் நான்கு பேர் சென்றால் பிடிக்க மாட்டார்களா. அப்புறம் எப்படி தப்பித்தார்கள் என்பதை ரிது எனக்கு சொல்லவில்லை.
அவளின் உலகத்தை விவரிக்க இந்த தளம் போதுமானதாக இருக்காது என்பதால், இத்துடன் நிறுத்தி உத்தேசித்திருக்கிறேன்(அப்பாடா).
என்ன சொல்வதற்காக இதை எழுதினேன் என தெரியவில்லை. ஆனால், குழந்தைகள் தெளிவாக இருக்கிறார்கள். எதை கடவுளிடம் சொல்ல வேண்டும்; அவர்களை எந்த அளவுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில்.
அவர்களும் கடவுளுடன் விளையாடுகிறார்கள்; நாமும் கடவுளை வைத்து(!) விளையாடுகிறோம்.
அடுத்த முறை அவள் வரும்போது, அனுவைப் பற்றி மேலும் விசாரித்து சொல்கிறேன். நீங்கள் பெங்களூரு போனால், சி.வி., ராமன் நகருக்கு விசிட் அடித்து, அனுவை நலம் விசாரியுங்கள்.

பிணமும் பொருதும் உன்னோடு



பிணமும் பொருதும் உன்னோடு


நானா உன்னோடு தோற்றவன்,
உன்படைக்கு கூற்றுவன்.
சிங்கமும் புலியும் பொருதியதில்லை
பொருதிய பொழுதுகளில் புலிகள் தோற்றதில்லை.
ஒற்றைப்புலியை கற்றைச் செந்நாய்கள் சூழ்ந்தன.

தைரியமற்று அல்ல; தற்காப்புக்காக
சற்றே நகர்ந்தோம் பின்நோக்கி.
பின்வாங்கலுக்கு பெயர் அல்ல தோல்வி,
எம்மை நம்பி இருக்கும் சில இன்னுயிர்களுக்காக
சிந்தினோம் ரத்தத் துளிகளை
சிந்திய ஒரு துளி ரத்தமும்
உன் உயிர்குடிக்கும்,
எங்கள் மூச்சுக் காற்றில் அனல்பறக்கும்.
மரணம் ஒன்றும் மிரட்சி அல்ல
நாங்கள் மரணமே அஞ்சும் புரட்சி.
சில கரங்கள் நீளுமென காத்திருந்தோம்
கறைபடாமல் வெல்லவே நினைத்திருந்தோம்
காலம் கைவிரித்தது . . .
புலிகளின் பலிகள் எண்ணில் அடங்கும்,
இனி எதிர்ப்பவர் பிணங்கள் மண்ணில் அடங்கும்.

ஏ. . . என் மிருகம் போன்ற எதிரியே
மிச்சமிருக்கும் உன் சக்தியை
திரட்டி வைத்துக் கொள்
சங்கத் தமிழனின் எச்சம் சொல்கிறேன். . .
எங்களுக்கான முறை இந்த வினாடியில்
துவங்குகிறது.
இனி
அச்சம் என்ற வார்த்தையின் உச்சம் அறிவாய்,

புராண நந்தியின் சாபம் தெரியுமா?
’குரங்கால் அழியும் உன் தேசம்’
ராவணனுக்கு பலித்தது.
’கொரில்லா’வும் ஒரு குரங்குதானே
இனிப்பார். . .
ரத்தநாளம் கண்ணில் தெரிய,
எதிரியின் ரத்தம் மண்ணில் தெறிக்க,
எழுவான் எழுவான் எங்கள் தமிழன்.
பயமே பயமே விலகிச்செல்,
புரட்சி வீழ்வதில்லை உரக்கச் சொல்!

எச்சரிக்கிறோம் பிணந்தின்னிகளே,
எதிரிகள் தேகம் எரியூட்ட புறப்பட்டோம்,
அட, மிருகமே விலகிச் செல்
அவகாசம் தருகிறோம் மண்டியிடு!
ஆயிரம் படைகள் வந்தால் என்ன?
உதவிக்கரங்கள் மறுத்தால் என்ன?
ஒவ்வொரு முறையும் பலியெடுப்போம்,
உன் பிணத்துக்கு கூட வலிகொடுப்போம்.
அடச்சே. . . . இனிச் சொல்வதற்கென்ன
எம் பிணம் கூட பொருதும் உன்னோடு

நானா உன்னோடு தோற்றவன்,
உன்படைக்கு கூற்றுவன்.

பாத்திரம் அறிந்து...

பாத்திரம் அறிந்து...
இரக்க உணர்வுகள் இல்லாமல் இல்லை. ஆனால், உழைப்பை கேவலப்படுத்தும் ஒரு விஷயமாகத்தான் பிச்சையிடுதலை என் கோணத்தில் பார்க்கத் தோன்றுகிறது. இயலாதவர்கள் என்பது வேறு. ஆனால், வாய்ப்பு மறுக்கப்படாத நிலையிலும் இரந்துண்டு வாழ்தல் தகுதியற்ற ஒரு விஷயம்.
பஸ்ஸ்டாண்டுகள், தெருவோரங்களில் கைநீட்டும் குழந்தைகளை பார்க்கையில் தவறு யார் மீது என்று புரியவில்லை. குழந்தைகளுடன் வரும் பெண்கள் கைநீட்டுகையில், இயற்கையாக எழும் பச்சாதாபம் உந்தித்தள்ளும் போதும், மனதை கல்லாக்கிக் கொண்டு பிச்சை மறுக்க வேண்டியதாகிறது. மனதிற்கும், புத்திக்கும் போராட்டம் நடக்கிறது. ஊக்குவிப்பதால்தானே மீண்டும் கையேந்துகின்றனர்.
சமீபமான நாட்களில் இரு நண்பர்களுடன் சென்று கொண்டிருந்த போது, கைக்குழந்தையுடன் கையேந்திய பெண்ணுக்கு, சில்லறை இல்லை என வழக்கமான பதிலை சொன்னேன். அருகிலிருந்த நண்பன்(சிவா)பாக்கெட்டை தடவிக் கொண்டிருந்தான். என்னிடம் இருந்த சில்லறையை அவனுக்கு கொடுத்து, பிச்சையிடச் சொன்னேன்.
அப்படியே செய்தவன், கேட்டான் "ஏன் மகாபிரபு நீங்க போட மாட்டீங்களா?'
பிச்சையிடுவது எனக்கு பிடிக்காது என்றேன். மற்றொரு நண்பனும்(ரவி)வழிமொழிந்தான். பின் பிச்சையிடுதலை பற்றி எங்கள் விவாதம் தொடர்ந்தது.
நமக்கே வாழ வழியில்லாத போது, இவர்கள் ஏன் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள்? எனது கோபமான கேள்விக்கு சிறிது நேரம் மவுனம் நிலவியது.
சிவா, "அப்படி ஏன் நினைக்கிறாய். வாழ்க்கையின் வேறு எந்த பரிமாணங்களையும் அவர்கள் கண்டதில்லை. பிளாட்பாரத்தில் வெட்டவெளியில், பரிணாமம் அற்றவைகளைப் போல் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தீர்த்துக் கொள்ளும் உடல் இச்சைதான் அவர்களின் ஒரே இன்பம். அதன் விளைவாகவே இனவிருத்தி. அதனால்தான் அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். குழந்தைகளை முதலீடாக கருதி பெற்றுக் கொள்வதில்லை,' என்றான்.
"ஆனால், குழந்தையைக்காட்டித்தானே அனுதாபத்தை பெறுகிறார்கள்,' விவாதத்தை நீட்டித்தேன்.
"முதலீடாக கருதி பெற்றுக் கொள்வதில்லை. ஆனால், பெற்ற பின்பு, வீட்டில் விட்டுவிட்டா வரமுடியும். அனுதாபத்தையும் பெறமுடியும் என்பது கூடுதல் காரணம் அவ்வளவே' அவன் கோணத்தில் இருந்து விளக்கினான்.
அப்படியானால், கடவுள்களோடு தொடர்பு படுத்தி அலகு குத்திக்கொண்டும்,< இன்னபிற காரணங்களை முன்வைத்தும் காசு கேட்போரையும் இதே பார்வையில் அணுகலாமா? முதுமையின் காரணமாக உழைக்க முடியாதவர்களும், நிஜமாகவே உடல்உறுப்பு செயல்பாடுகள் குறைந்தவருக்கும் உதவுவதில் தவறில்லை. உண்மையில் அதுகூட தவறான ஒன்றுதான்.
பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் அரசு, அந்தந்த மண்டலவாரியான அதிகாரிகள், இதற்கு நடவடிக்கை எடுக்க முடியும். கண்ட காரணங்களுக்காக செலவிட்டு, விளம்பரம் தேடிக்கொள்ளும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், பணக்கார சேவை அமைப்புகளும் இதில் ஏன் அக்கறை காட்டவில்லை.
அப்படி அக்கறை காட்டும் ஒன்றிரண்டு நிறுவனங்கள்(!குறிக்கோள் பணம் எனில், அவை அமைப்புகள் அல்ல. நிறுவனங்கள் என்பது என் கருத்து) வெளிநாட்டு நிதி உதவி, அரசுகளின் வரிவிலக்குகளுக்காக வேஷம் போடுகின்றன.
பிச்சை புகினும் கற்கை நன்று; ஆனால், பாத்திரம் அறிந்து பிச்சையிடு.
ஒருபோதும் பிச்சையிடுதலை ஊக்குவிப்பதில்லை என்பதே எனது கோணம். உங்களின் கருத்துகள் என் கோணத்தை மாற்ற உதவலாம் நண்பர்களே..

கேப்டன் போடும் டாஸ்

பச்சையான சந்தர்ப்பவாதம். வேறென்ன சொல்ல. வழக்கமான அரசியல்வாதிகளைப் போலத்தான் தானும்;திராவிடக்கட்சிகளுக்கு மாற்று என்பதெல்லாம் வெறும் பாவ்லா என்பதை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார் தே.மு.தி.க.,
தலைவர் விஜயகாந்த்.தான் சந்தித்த முதல் சட்டசபை தேர்தலில் 8 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று தமிழக அரசியலில் தன்னை
முன்னிறுத்திக் கொண்டார் கேப்டன்(!?). இளைஞர்களை கவரும் விதத்திலான எளிமையான பேச்சு; இரண்டாம் கட்ட தலைவர்கள் இல்லாத போதும்,
திராவிடக்கட்சிகளுக்கு மாற்று என தன்னைக் காட்டிக் கொண்ட விதம் என்பன போன்றவற்றாலும்; இதுவரை வாக்களிக்கச்
சென்றிடாத சில சதவீத வாக்குகள் பதிவான போது, அது தே.மு.தி.க.,வுக்கு என மாற்றிக் கொண்டதும் அரசியலில் விஜயகாந்தின்
வளர்ச்சிக்கு காரணங்கள்.உண்மையில் இவையெல்லாம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வரைதான். லோக்சபா தேர்தல் என்பதால், தமிழகத்தில்
புறம்தள்ளி விட முடியாத ஒரு கட்சி போல் தெரிந்தாலும், என்னைப் பொருத்தவரையில் அவர் மக்கள் தன் மீது வைத்த
நம்பிக்கையை இழக்கச் செய்து விட்டார் என்றே தோன்றுகிறது.குறிப்பிட்ட காலங்களுக்கு பின்னும்(நான்கு ஆண்டுகள்) அதே முறையிலான அரசியல் பேச்சுகள் மக்களை சலிப்படையச்
செய்துள்ளது. கடந்த சட்டசபைக் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருந்த போது, குட்டிக் கோடம்பாக்கத்தில்(பொள்ளாச்சி) "மரியாதை' பட
ஷூட்டிங்கில் பிசியாக இருந்தார். சட்டசபை கூட்டத்தொடருக்கு செல்லவில்லையா என்ற நிருபர்களின் கேள்விக்கு "இப்போது
தொழிலுக்காக வந்துள்ளேன். அதைத்தான் பார்க்கப் போகிறேன்' என திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.தொழில் முக்கியம் என்பவர் ஏன் அரசியலுக்கு வரவேண்டும்?கோவை விமான நிலையத்தில் வழிமறித்த செய்தியாளர்கள் , இலங்கைப் பிரச்னை குறித்து கேள்வி எழுப்பியபோது, பதில் எதுவும்
சொல்லாமல், "தொழிலை கவனிக்கவே வந்தேன் வேறேதுவும் கேட்க வேண்டாம்' என மழுப்பினார்.எல்லோரையும் போல அவருக்கும் திடீரென விழிப்பு வந்தது. ஈழத்தமிழர்களுக்காக மத்திய மாநில அரசுகள் எதுவும்
செய்யவில்லை. எனவே, லோக்சபா தேர்தலை புறக்கணிப்போம் என அழைப்பு விடுத்தார்(யாருக்கு?).தமிழினத்தலைவர் என அழைத்துக் கொள்ளும் கருணாநிதி ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்து விட்டார் எனத்துவங்கி, அப்பா
என மரியாதையாய்(!) அழைத்து வந்த கலைஞரை கடுமையாக விமர்சித்தார்.இறுதி வரை தனியாகத்தான் போட்டியிடுவேன்; மக்களை மட்டுமே நம்புகிறேன் என்று கூறி வந்தவர்; டெல்லியில்
காங்.,மேலிடத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதை நீங்கள் படிக்கும் போது அனேகமாக கூட்டணி உறுதி செய்யப்பட்டிருக்கலாம். பா.ம.க., மட்டுமே இப்போது விஜயகாந்த்
கூட்டணியில் சேர்வதற்கான "செக்'.பா.ம.க.,வுக்கு எதிரணியில் சேர்வதுதான் கேப்டனின் திட்டம். இரட்டை இலக்கத்தில் சீட் கோரி வரும் விஜயகாந்த் தனியாக
போட்டியிடுவேன் என்ற வார்த்தை தர்மத்தை மீறி விட்டார். மற்ற கட்சியினரை ஒண்டிக்கு ஒண்டி அழைத்தவர், அரசியல்
சதுரங்கத்தில் தானும் மக்களை வெட்டுக் கொடுத்து, தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் சாதாரண அரசியல்வாதி என்பதை
நிரூபித்து விட்டார்.ஒரு திரைப்படத்தில், "நான் வருவேன், வரமாட்டேன்னு பூச்சாண்டி காட்ட மாட்டேன். வந்தா உறுதியா வருவேன்' என பிரபல
நடிகரை தாக்கி "பஞ்ச்' டயலாக் பேசியவர், இப்போது, கூட்டணி இல்லை; நான் தெளிவா இருக்கேன்; கூட்டணி பத்தி மூன்று
நாட்களில் சொல்வேன்' என விளக்கெண்ணை வாதம் பேசி வருகிறார்.கேப்டன் எடுக்கும் முடிவை பொருத்தே அவர் கட்சியின் எதிர்காலம்(!) அமையும் கூட்டணியா இல்லையா என்பதை டாஸ் போட்டு பார்ப்பாரா கேப்டன்?

இனி சர்க்கஸ் பார்ப்பதில்லை'

லேசான மனதுடன் தான் சென்றேன் அந்த சர்க்கஸ் நிகழ்ச்சிக்கு... குழந்தைகள் முதல், பெரியவர் வரை அனைவரையும்
குதுõகலப்படுத்தும் அந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்னை மட்டும் கனத்த மனதுடன் வெளியே அனுப்பியது. இறுகிப்பிடிக்கும்
உடை; வளமையான உடல்வாகு; வெண்ணிற தோல்; ரஷ்ய, நேபாள பெண்களுக்கே உரிய முகவெட்டு இவற்றைப்பார்த்தால்
என்ன தோன்றும்; என்ன தோன்ற வேண்டும்? வழக்கமான இளமைக்குறும்புகள் குறுகுறுக்கவில்லை.அந்த பெண்களின் முகத்தில் வேறு எந்த பாவங்களும் வெளிப்படவில்லை. சாகசம் செய்யும் போது, தன்னை மறந்து பொதுமக்கள்
கைதட்டியவை சில நிகழ்ச்சிகளே. பெரும்பாலான நிகழ்ச்சிகளை மக்கள் கண்டு ரசித்தார்களே தவிர, கைதட்டவில்லை.
அப்போதெல்லாம் சக கலைஞர்களே கைதட்டி உற்சாகப்படுத்தினர். வாயில் மண்öண்ணையை வைத்துக் கொண்டு, அக்னி ஜூவாலைகளை கக்கும் போது, சாகசத்தை ரசிக்க முடிந்தவர்கள் கடைசி
வரிசையில் அமர்ந்திருந்தவர்கள் மட்டுமே. முன்வரிசையில் அமர்ந்திருந்தவர்களும் ரசித்திருக்கக்கூடும்; என்னைத் தவிர.
சாகசமாக பார்க்க முடியவில்லை அதை. வயிற்றுப் பிழைப்புக்காக செய்து பார்க்கும் மரண விளையாட்டாகவே தோன்றியது.ஒரு நாளைக்கு மூன்று முறை, அரைகுறை உடையுடன் அந்தரத்தில் மிதந்தும், ஒற்றைக்காலில் உயரக்கம்பியில் சாகசம்
செய்வதும் அவர்கள் சாகசத்தை விரும்பி ஏற்றதால் செய்யவில்லை என்பது அவர்களின் முகபாவத்தில் தெரிந்தது.அவர்களின் வெளி உலக பிரக்ஞை எப்படி இருக்கும்? நான்கு சுவர்களுக்குள் மன்னிக்கவும் சுற்றிலும் கட்டப்பட்ட
துணிச்சுவர்களுக்கு மத்தியில் பலதரப்பட்ட கலாச்சாரங்களுக்கு மத்தியில் வாழ்பவர்கள், வாழ நிர்ப்பந்திக்கப்பட்டவர்களின்
ரசனை எப்படி இருக்கும். நாம் பொழுது போக்கு நிகழ்ச்சிக்கு செல்வது போல், அவர்கள் எந்த நிகழ்ச்சிக்கு செல்வார்கள்?
சினிமாவுக்கா. அதில் வரும் சாகச நிகழ்ச்சிகளை பார்க்கும் போது என்ன தோன்றும்? அந்த சாகசத்தை பார்க்கும் போது கைதட்டத்
தோன்றுமா அவர்களுக்கு? அல்லது இதை விட நம்மால் நன்றாக செய்திருக்க முடியும் என்று தோன்றியிருக்குமோ? இத்தனை
எண்ணங்களும் தோன்றின ஒரே சமயத்தில்...ஆவலும், ஆதங்கமும் உந்த அவர்களுடன் கலந்துரையாடினேன்..(மொழி பெயர்ப்பாளரின் உதவியுடன்) பைக்கில் சாகசம் செய்பவர் ஒரு நேபாளி இளைஞன். அடுத்த மாதம் திருமணமாம். பயமாக இல்லையா என்றேன். "எதற்கு பயம்,
துவக்கத்தில் சற்று இருந்தது. இது எனக்குப்பிடித்த வேலைதான். பைக் ஓட்டுவதற்கு மட்டும் யாராவது சம்பளம் தருவார்களா.
அதனால்தான் கொஞ்சம் ரிஸ்க் எடுக்கிறேன். "விழுந்திருக்கிறீர்களா என்றேன்'. ஒரே முறை ஆனால் உயிர் போகவில்லை என்றார்
சிரித்தபடி. அவரின் வருங்கால மனைவி கொஞ்சம் பயந்த சுபாவமாம்!ஐந்து, ஆறு தொப்பிகளை பறக்க விட்டு பிடித்தல், தட்டுகளை பறக்கவிடுதல் போன்ற சாகசங்களை பேன்சி ஐட்டம் என்கிறார்கள்.
நடுத்தர வயதை தாண்டிக்கொண்டிருக்கும் கேரளவாசியிடம் பேசியபோது, "நானும் "பார்' விளையாடியவன்தான். ஒரு முறை
பயிற்சியின் போது தவறியதில் மூன்று மாதம் சிகிச்சை பெற வேண்டியதாயிற்று. அதன்பின் பேன்சி ஐட்டங்களில் கவனம்
செலுத்துகிறேன். என்னைப் போல் பலரும் இப்படித்தான், இளமையில் சாகசம் செய்து விட்டு, சற்று வயதானால், பேன்சி
ஐட்டங்களில் தஞ்சமடைகிறோம்,' என்றார். அவரது மகள்கள் இருவரும் கேரள பள்ளியில் படிக்கின்றனராம். எப்போவாவது வீடு
செல்வார்களாம்.இது இந்தியாவின் பாரம்பரிய கலை. மத்திய அரசு அழிந்து வரும் கலையாக அறிவித்து, பாதுகாப்போம் எனக் கூறியபோதும் அரசு
இயந்திரங்கள் வழக்கமாக "கிறீச்'ஒலியுடன் மெதுவாகத்தான் சுழல்கின்றன. கேரளாவில் சர்க்கஸ் கலைஞர்களுக்கு ஓய்வூதியம்
வழங்கப்படுகிறதாம். ஒரு குட்டி கிராமமே உள்ளிருக்கிறது கூடாரத்துக்குள். கலைஞர்கள் இருநுõறு பேர் என்றால் உதவியாளர்களும் சரிசமமாக
இருக்கின்றனர். நானுõறு பேருடன், குதிரைகள், யானை, நாய்கள் என விலங்குகளின் பட்டாளமும் இருக்கிறது. ஒரு நாளுக்கு
30 ஆயிரம் ரூபாய் செலவாகிறது அந்த கூடாரத்துக்குள்.பருவகால மாறுபாடு, மழை, அறுவடைக்காலம் இவையெல்லாம் பார்த்துத்தான் அடுத்த ஊருக்கு கிளம்பிச் செல்ல
வேண்டியிருக்குமாம். இல்லாவிட்டால் கடும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.யானைப்பாகனிடம் சென்றேன். மதுரைத்தமிழன். உற்சாக பான வாடை அடித்தது. "இது இல்லாமல் இருக்க முடியலே. ஆனா
அதிகம் அடிக்க மாட்டேன். கொஞ்சம் வேணும் பழகிப் போச்சு' என்றவரிடம், "எவ்வளவு பெரிய உயிர். பிச்சை எடுக்க
விடுகிறீர்களே? பாவம் இல்லையா' நீண்ட நாள் ஆதங்கத்தை கேட்டே விட்டேன். சில வினாடிகள் மௌனம் சாதித்தவர் நீண்ட பெருமூச்சுடன் சொன்னார் "எங்களுக்கு மட்டும் ஆசையா ? அவனவன் கஷ்டம்
அவனவனுக்கு' என்றவர் வேறெதும் பேச விருப்பமில்லாதவர் போல் யானையின் துதிக்கையை நீண்ட நேரம் தடவியவர், அதன்
உணவுக்காக வைத்திருந்த தென்னங்குருத்துகளின் மேல் குத்துக்காலிட்டு அமர்ந்து எங்கோ வெறித்தார்(என்ன
தோணியிருக்கும்).உருவத்தில் மட்டும் வளர்ச்சி குன்றிய, ஜோக்கராக மகிழ்விக்கும் மனிதர்கள் அப்போதும் சிரித்தபடி ஒரு வயசாளியிடம்
வம்பிழுத்துக் கொண்டிருந்தனர். ஒரு 13 வயது சிறுமியிடம் பயிற்சியின் போது நேர்ந்த தவறுக்காக திட்டிக்கொண்டிருந்தார் ஒரு
இருபது பிளஸ் வயதுகளில் இருந்த பெண் மணி. கூடாரத்தின் ஒரு மூலையில் நின்று அனைவரையும் ஒரு முறை பார்த்தேன்
அங்கே வேறு ஒரு உலகம் இயங்கிக் கொண்டிருந்தது. கம்ப்யூட்டர் வைரஸ் பற்றியோ, ஒபாமாவின் பதவியேற்பு பற்றியோ,
சச்சினின் நியூசி., மண்ணில் முதல் சதம் பற்றியோ அங்கு பேசப்படவில்லை. அங்கு இயங்கிக் கொண்டிருந்தது வேறு உலகம்.வெளி உலகத்தில் இருந்து வந்தவர்களை கைதட்ட வைக்க அடுத்த காட்சிக்கு தயாராகிக் கொண்டிருந்தனர்.அந்த நிறுவனத்தின் வெளிவட்டார வேலைகளை கவனிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த நிர்வாகி ஒருவர் எப்படி இருக்கிறது
எங்கள் உலகம் என்றபடி குளிர்பானம் ஒன்றை தந்தார். வாங்கி அருந்தத் தோன்றவில்லை எனக்கு. மறுத்து வெளியேறினேன்
என்னுடன் வந்த புகைப்படகலைஞர் ஒருவருடன்.வெளியே சர்..,ரென கடந்து போயிற்று ஒரு நவீன மாடல் கார். நெரிசல் மிகுந்த சாலையைக் கடக்கும் சாகசத்துக்கு
தயாரானேன் நான். சங்கல்பம் செய்தேன் நான் "இனி சர்க்கஸ் பார்ப்பதில்லை'