பாற்கடல்...

இனியவை பிறக்கட்டும்...

வா... வந்து தொலையுங்கள்



ஏ... கூத்தாடிகளே!
வக்கற்றவன் ஒருவன்
வயிறெறிந்து சொல்கிறேன்
கேட்டுவிட்டுச் செல்லுங்கள்.

ஈனப்பிறவிகளால் எம்மினம்
சீரழிக்கப்பட்டபோது,
சகோதரன் என்றுதானே
கை நீட்டினோம்.
எதிரி கூட எம்மிடம்
இரக்கம் காட்டியிருக்கக் கூடும்
ஆனால், நீங்கள் துரோகிகள்


இங்கு
பாலுக்கழுத குழந்தையின்
வாயில் கந்தகத்துகள்கள்
எரிந்தன.
தாயின் கருவறை வாயில்கள்
கயவரின் கால்களால்
மிதியுண்டன.

அங்கோ...
பசப்பு வார்த்தைகளால்
பாலாபிஷேகம் செய்யும்
பாசத்தலைவனுக்கு
பாராட்டு விழா நடத்தினீர்.
தொடை தெரிய ஆடினீர்,
துண்டு போர்த்து பாடினீர்.


எல்லாம் முடிந்தது...
ரத்தச் சகதிக்குள்
புதைக்கப்பட்டது
ஓரினம்
எல்லாம்... முடிந்தது.

அன்று அழைத்தோம்
கதறல்களால் காடுகள்
கூட கருகிப் போயின.
நீங்கள் வரவில்லை
இன்று மறுத்தோம்
வருவதாய்த் தகவல்

வா... வந்து தொலையுங்கள்
எம் ரத்தச் சிதறல்களால்
அரிதாரம் பூசுங்கள்
சிசுக்களின் மண்டையோட்டில்
தேநீர் அருந்துங்கள்
நொறுங்கிய எம்
எலும்புகள் மீது
மேடை போடுங்கள்
உம் மதர்த்த முலைகள்
திமிரத்... திமிர...
ஆடுங்கள்
கொலை செய்த கைகள்
களைத்துப் போயிருக்கும்
சிரம பரிகாரம் செய்வியுங்கள்.
எம் பெண்களை
வன்புணர்ந்து வன்புணர்ந்து
அவர்களின் குறிகள்
வீங்கிப் போயிருக்கும்
வெஞ்சாமரம் வீசுங்கள்
அவர்கள் விட்டெறியும்
காசுகளால்
உங்களுக்கு உள்ளாடை
தைத்துக் கொள்ளுங்கள்.

அத்தோடு இந்த வக்கற்றவனின்
வரத்தையும் வாங்கிக் கொள்ளுங்கள்.

எம் பிணங்களின்
வாய்க்கரிசியில்
உமக்கான உணவு
சமைக்கப்படட்டும்
குடிநீர்க் குவளையில்
ரத்தம் ததும்பட்டும்
தூமைத் துணிகளில்
ஆடைகள் நெய்யப்படட்டும்
நும் மனைவிகளின்
வயிற்றில் கருந்தேள்
கருக்கொள்ளட்டும்
பூஜையறையில்
சாம்பிராணிக்குப் பதில்
சதைத்துணுக்குகள்
வேகட்டும்
உம் படுக்கை அறையில்,
கயவர்களால் சிதறடிக்கப்பட்ட
முதிராத என் தங்கையின்
கதறல் கேட்கட்டும்

வா... வந்து தொலையுங்கள்

பற்றி எரியும் சுயம்...


உனக்கும் எனக்குமான போரில்,
எனது வியூகத்தை தகர்க்க
உனக்கு சாத்தியமற்றுப் போனது.
உன்னை முன்னேற விடாமல்
தடுத்து விட்டது சுயத்தால்
பாதுகாக்கப்பட்ட என் சாம்ராஜ்யம்.
அகழி அடுத்த கற்சுவர்
உன் பிரவேச எண்ணத்தை
தேக்கியது.
என் சக பரிவாரங்களுடன்
போரிடவே உனக்கு
நேரம் போதவில்லை.
என்னை நேர் சந்திக்கும் பிரயத்னம்
பலனற்ற நிலையில்,
அனைத்து ஆயுதங்களையும்
கையிழந்தாய்.
சரணடைந்தேனும்
உட்புகுதல் என்ற கோரிக்கையும்
மறுதலிக்கப்பட்டது,
வெற்றிக் களிப்பில் நான்;
உன்னிடம் இருந்து
உதிர்ந்தன வார்த்தைகள்
"எல்லோரையும் போலத்தானே நீயும்'
அகழி தூர்ந்தது;
படை குலைந்தது;
கவசங்கள் நொறுங்கி,
நான் நிராயுதபாணியானேன்.
உன் அடுத்த தாக்குதல், போரை
முடிவுக்கு கொண்டு வந்து விடக்கூடும்.
ஆயுதப்பிரயோகத்தை நீ விரும்பவில்லை
இயலாமையும், ஏமாற்றமுமாய்
துயர மௌனத்துடன்
திரும்பினாய்.
அந்த வினாடியில் இருந்து
பற்றி எரிந்து கொண்டிருக்கிறது
என் சாம்ராஜ்யம்.

நண்பர்களாகப் பிரிவோம் என்றாய் நீ...




ஹக்...
கழுத்துக்கும் தோளுக்கும் இடையில்
எலும்புச் சந்துக்குள் அரை அடியைக்
கடந்தது ஈட்டி.
அதன் பின்னோக்கிய கூர்த்த
சிணுக்குகள் வலியின்
உச்சத்தைப் பரிசளித்தன.

ராட்ஷச மரங்கள் பச்சைப்
புள்ளிகளாய்,
ஏரியும் குளமும் நீரின்
துளியாய் தெரிய,
மலை உச்சி.
கால் கட்டை விரலுக்கு முன்னால்
சரேலென பாய்ந்த
பள்ளம் ;
உயரத்தின் பயத்தை
உள்ளங்கால்கள் உணர்த்திய போது,
கால்களுக்குக் கீழ்
பூமி நழுவியது.
த்தட்...

நீருக்குள் இருந்து காற்றுவெளியைத்
தேடிய கைகள் சலித்துப் போயின.
நுரையீரலின் கடைசிக் காற்றுக்
குமிழ் வெளியேறியது.
மூக்கை நம்பிப் பயனில்லை
சுவாசத்துக்காக துடித்த வாய் திறந்தபோது,
காற்றின் இடத்தை நீர்
நிரப்பியது.
ப்ளக்..

இப்படியான ஒரு சூழ்நிலையில்,
நண்பர்களாகப் பிரிவோம் என்றாய் நீ...