
ஏ... கூத்தாடிகளே!
வக்கற்றவன் ஒருவன்
வயிறெறிந்து சொல்கிறேன்
கேட்டுவிட்டுச் செல்லுங்கள்.
ஈனப்பிறவிகளால் எம்மினம்
சீரழிக்கப்பட்டபோது,
சகோதரன் என்றுதானே
கை நீட்டினோம்.
எதிரி கூட எம்மிடம்
இரக்கம் காட்டியிருக்கக் கூடும்
ஆனால், நீங்கள் துரோகிகள்
இங்கு
பாலுக்கழுத குழந்தையின்
வாயில் கந்தகத்துகள்கள்
எரிந்தன.
தாயின் கருவறை வாயில்கள்
கயவரின் கால்களால்
மிதியுண்டன.
அங்கோ...
பசப்பு வார்த்தைகளால்
பாலாபிஷேகம் செய்யும்
பாசத்தலைவனுக்கு
பாராட்டு விழா நடத்தினீர்.
தொடை தெரிய ஆடினீர்,
துண்டு போர்த்து பாடினீர்.
எல்லாம் முடிந்தது...
ரத்தச் சகதிக்குள்
புதைக்கப்பட்டது
ஓரினம்
எல்லாம்... முடிந்தது.
அன்று அழைத்தோம்
கதறல்களால் காடுகள்
கூட கருகிப் போயின.
நீங்கள் வரவில்லை
இன்று மறுத்தோம்
வருவதாய்த் தகவல்
வா... வந்து தொலையுங்கள்
எம் ரத்தச் சிதறல்களால்
அரிதாரம் பூசுங்கள்
சிசுக்களின் மண்டையோட்டில்
தேநீர் அருந்துங்கள்
நொறுங்கிய எம்
எலும்புகள் மீது
மேடை போடுங்கள்
உம் மதர்த்த முலைகள்
திமிரத்... திமிர...
ஆடுங்கள்
கொலை செய்த கைகள்
களைத்துப் போயிருக்கும்
சிரம பரிகாரம் செய்வியுங்கள்.
எம் பெண்களை
வன்புணர்ந்து வன்புணர்ந்து
அவர்களின் குறிகள்
வீங்கிப் போயிருக்கும்
வெஞ்சாமரம் வீசுங்கள்
அவர்கள் விட்டெறியும்
காசுகளால்
உங்களுக்கு உள்ளாடை
தைத்துக் கொள்ளுங்கள்.
அத்தோடு இந்த வக்கற்றவனின்
வரத்தையும் வாங்கிக் கொள்ளுங்கள்.
எம் பிணங்களின்
வாய்க்கரிசியில்
உமக்கான உணவு
சமைக்கப்படட்டும்
குடிநீர்க் குவளையில்
ரத்தம் ததும்பட்டும்
தூமைத் துணிகளில்
ஆடைகள் நெய்யப்படட்டும்
நும் மனைவிகளின்
வயிற்றில் கருந்தேள்
கருக்கொள்ளட்டும்
பூஜையறையில்
சாம்பிராணிக்குப் பதில்
சதைத்துணுக்குகள்
வேகட்டும்
உம் படுக்கை அறையில்,
கயவர்களால் சிதறடிக்கப்பட்ட
முதிராத என் தங்கையின்
கதறல் கேட்கட்டும்
வா... வந்து தொலையுங்கள்

