பாற்கடல்...

இனியவை பிறக்கட்டும்...

மௌனத்தின் கோப்பை





ஒலிகள் கெட்டிப்பட்டு
கிடந்த சந்தை,
வெண்ணிற சிறகு விரித்த
தேவதையின் வருகையில்
நிர்ச்சலனமானது.

நீட்சி பெற்ற விரல்களால்
கோப்பை ஒன்றை வைத்தது
அத்தேவதை,
"வழியும் அளவுக்கு நிரப்புவோர்
முன்வரலாம்'
வார்த்தைகளை உதிர்த்து விட்டு
காத்திருந்தது.

இரவின் அந்தகாரத்தை எடுத்து வந்து
ஊற்றினான் தனிமை விரும்பி;
உள்ளே நுழைவதற்குள்
உலர்ந்து போயிற்று.

மயானத்தின் நிசப்தங்களை
திரட்டி வந்து கொட்டினான்
வெட்டியான்;
கால்வாசிக்குள்
காணாமல் போயிற்று.

வார்த்தைகளால் வரையறுக்க
இயலாததை
எப்படி விளக்க,
அகராதி தேடியது ஒரு புத்தகப்புழு.

"வழியும் அளவுக்கு மௌனத்தை
நிரப்ப முடியாது'
முணுமுணுத்தான் தர்க்கவாதி.

இவையும், இன்னபிறவும்
பயனற்று போக,
கூட்டத்தில் உ(ம)றைந்திருந்தது
மௌனம்.

யாரும் எதிர்பாராத
கணத்தில்,
நிர்வாணம் உடுத்திய
சிறுமியின் கொலுசொலியில்
நிரம்பி வழிந்தது
மௌனத்தின் கோப்பை.

உலகத் தமிழ்ப் (செம்மொழி) பாதுகாப்பு மாநாடு- கூத்துகளுக்கு அளவேயில்லையா?

உலகத்தமிழ் மாநாடு நடத்த அனுமதி கிடைக்காததால், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தி, தி.மு.க., அரசு(கவனிக்கவும்தமிழக அரசு அல்ல) தமிழைப் பாதுகாக்கப் போகிறது. தமிழ்மொழியின் பெருமையையும், பாரம்பரியத்தையும் பாதுகாக்க தி.மு.க., அரசு இருக்கிறது; அவர்களுக்கு மட்டுமே அந்த தார்மீக உரிமை இருக்கும் நிலையில், புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி அதில் பங்கு கேட்பதில் என்ன நியாயம் இருக்க முடியும், திருவாளர்கள் தமிழ் மகாஜனங்களே?

கோவையில் செம்மொழி மாநாடு நடக்க உள்ளது. அதே இடத்தில், உலகத்தமிழ் பாதுகாப்பு மாநாடு நடத்த, டாக்டர் கிருஷ்ணசாமி அனுமதி கோருகிறார். அப்படியானால், அரசியல் சாணக்கியர் கலைஞரை எதிர்க்கும் அளவுக்கு அவருக்கு துணிச்சல் வந்துவிட்டதா என்ன?

இதையெல்லாம் இப்படியே விட்டுவிடக்கூடாது என, எண்ணிய கோவை காவல்துறை(ஸ்காட்லாந்து யார்டுக்கு அடுத்தபடியாய் நாங்கதான்), அதற்கு அனுமதி மறுத்துவிட்டது. இம்மாநாடு நடத்தக்கூடாது, என தமிழக அரசு சார்பில் டி.ஜி.பி., சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், விடாக்கண்டன் கிருஷ்ணசாமி விடுவதாயில்லை; கோர்ட்டுக்கு போய்விட்டார்.

மேல்முறையீட்டில், "மாநாடு நடத்துவது குறித்து, அங்குள்ள சூழலை ஆய்வு செய்து கோவை மாநகர காவல்துறை அறிக்கை தயாரித்து அனுப்ப வேண்டும்' என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோர்ட் உத்தரவுதான் கிடைச்சாச்சே என்று, கிருஷ்ணசாமியும், கோவை கமிஷனர் சிவானாண்டியை சந்தித்து, ஆலோசனை நடத்தி விட்டார்.

பிப்., 6,7ம் தேதிகளில் மாநாடு நடத்த திட்டம் போட்டுருக்காங்களாம். ஆனா, இன்னிக்குள்ள(3ம்தேதி) அனுமதி கிடைச்சாதான் மாநாட்டு பணிகளை துவக்க முடியும். கமிஷனரோ, "கோர்ட் உத்தரவுப்படி, சட்டப்படி பரிசீலனை செய்து அறிக்கை தயார் செய்து அனுப்பப்படும்'னு சொல்லியிருக்கார்.

இதுல யார் பலசாலி. எட்டு மாசமா ஒரு கவர்ன்மென்டே மாநாட்டு பணியில ஈடுபட்டுட்டு இருக்கு. அவங்க மேலய புகார்மேல புகார்.(அட, அநியாயமே. செம்மொழி மாநாட்டுக்காக,கோவை மாநகராட்சிக்கு 113 கோடி ரூபாய்ல, இன்னும் ஒரு பைசாகூட ஒதுக்கலயாமே. யரோ ஒரு புண்ணியவான், தகவல் அறியும் உரிமைச்சட்டத்துல அதையும் கேட்டுருக்கானுங்க)
ஆனா, நம்மாளு 3ம் தேதி அறிவிச்சா, 6ம் தேதி மாநாடு நடத்திருவேனு மார்தட்டிட்டு நிற்கறாரு. அப்ப கண்டிப்பா, கிருஷ்ணசாமிதான் பலசாலி.

இதுல ஒரு விஷயம் மட்டும் புரியல எனக்கு. ஒட்டு மொத்த தமிழனுங்களோட பிரதிநிதிகளா இவங்கள யார் நியமிச்சது? போதும்ப்பா, "முள்வேலி' கொடுமையை தகர்க்க, தீக்குளிச்சு செத்தவன் செத்தான். அவன அரசியல் ஆயுதமா பயன்படுத்தின படுபாவிங்களும் இருக்காங்க. இப்ப என்னடான்னா, தமிழ் மொழி ரட்சகர்களாக தன்னை அறிவிச்சுக்க இவங்க படுற பாட்ட பாத்தா சிரிப்பு வரல. கண்ணீர்தான் வருது.

அடுத்த எலக்ஷன்ல, தேர்தல் வாக்குறுதி என்ன தெரியுமா? செம்மொழி மாநாட்டுல கலந்துகிட்டவங்களுக்கும், கேட்டவங்களுக்கும், பாத்தவங்களுக்கும், படிச்சவங்களும், கேள்விப்பட்டவங்களுக்கும், அதப்பத்தி பேசுனவங்களுக்கும், குறை சொல்லாதவங்களுக்கும், விளக்குபுடிச்சவங்களுக்கும், அதுக்கு எண்ணெய் ஊத்துனங்களுக்கும், மூணு வேளையும் எலவசமா சோறு போடறாங்களாம்... சோறுபோடறாங்களாம்.... சோறுபோடறா...ங்களா...ம்.

'கண்டக' குதிரைகள்



இரவின் நிசப்தம் கலைந்து விடாமல்

களையப்பட்டன அணிகலன்கள்;

ஆடைகளும் பாரமோ,

உரியப்பட்டன துகில்கள்.


கழல், குண்டலம், கணையாழி

இத்யாதி இத்யாதிகள்;

எவையெல்லாம் பாரமாகுமோ

அவையெல்லாம் அகற்றப்பட்டன,

இதந்தரு மனையும், மனையும் நீங்கினான்.

வெண்ணிப்பறந்தலையில் பிறர் வெட்க,

போர்புரிந்த கரிகாலனின்

திருப்தி இருந்தது முகத்தில்;

புதிதாய் பிறந்தது போல், எதுவும் இல்லாமல்.



உயிரற்ற சுமைகள், உணர்ச்சிகள் அகன்ற பின்

சுமப்பதற்காகவே இருந்த புரவி

பின்தொடர்ந்தது நிழலாய்; நள்ளிரவிலும்.

தண்ணொளி பட்டு மின்னிய

ஆற்றின் கரையில்

இறுதியாய் புரவியையும் நீங்கினான்;

புரவி இறக்கி வைத்தது உடல் சுமையை;

அவன் கால்களை நாவால் ஈரப்படுத்திய பின்;

தன் உயிர்ச் சுமையையும்.

சித்தார்த்தன் புத்தன் ஆவதிலும்

இருக்கிறது சிக்கல்

இறக்க வேண்டி இருக்கிறது

'கண்டக' குதிரைகள்.




குறிப்பு:சித்தார்த்தன் குதிரையின் பெயர் கண்டகம்